Thursday, September 26, 2019

அனா ஹதம்



மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனம் ஆக்கி ஞான் பாடும்
-கவிஞர் வாலி.

ராகினீ!
என் தர்மாவதீ!

சம்பூரணமாய்ச்
சமைந்தவளே!

ஏகன் சமைத்த
உன் வடிவம்
ஏழிசை

கரந்து
எனக்கே கமழும்
உன் கந்தம்
நளினகாந்தி

அன்றாடம் புதிதாய்
அழைக்கும்
உன் அசைவுகள்
ரீதி கௌளை

சவியுறத் தழுவிய
நதியென
உன் நடை
சலநாட்டை

உயிரின் ஒளிமிகு
உன் பார்வை
பூபாளம்

வினாடியெனினும்
விலகாதணையும்
அன்பின் அன்றிலே!
உன் சிணுங்கல்
ஹம்ஸத்வனி

மனமெனும் ஏரியில்
அலைகளாடும்
உன் பேச்சு
ஹம்ஸநாதம்

சக்தி எழுந்த
சாந்த ரூபம்
உன் கோபம்
கம்பீர நாட்டை
குறிஞ்சி மலர்ந்த
அரிய அழகே!
உன் சிரிப்பு
மலைய மாருதம்

இல்லத்திருந்து
உள்ளம் உருகும்
உன் ஏக்கம்
ஜோன்பூரி

கலி தீர ஒளி சேர
இருள் மாய அருள் பாய
உன் பிரார்த்தனை
பஹுதாரி

மருள் மான் கண்ணில்
அரிமா நோக்கென
உன் புலவி
சிம்மேந்திர மத்யமம்

கருணை அமிர்தக்
கடலின் பாவாய்!
உன் ஸ்பரிசம்
பாகேஸ்ரீ

முக்தியின்
முன்சுவையாகும்
உன் முத்தம்
மதுவந்தி

’நான்’ கரையும்
நம் ஏகாந்தக் கலவி
அனாஹதம்.

No comments:

Post a Comment