Sunday, October 28, 2018

சுடர்மிகும் அறிவு


      


      





















      நல்லதோர் வீணை செய்தே – அதை
      நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
      சொல்லடி சிவசக்தி – எனைச்      
      சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
என்று புலம்பினான் பாரதி. 

சுடர் மிகும் அறிவு என்பது எது? பள்ளியிலும் கல்லூரியிலும் பயிற்றுவிக்கப் படுகிறதே அந்த அறிவா? பாரதி பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவன்தான். அவற்றில் பெற்ற அறிவைத்தான் சுடர் மிகும் அறிவு என்று அவன் சொல்கிறானா?

பள்ளிக் கல்வியை, குறிப்பாக ஆங்கில வழிக் கல்வியை “ஊனர் கல்வி” என்று அவன் சாடுகிறான். பள்ளியில் தன்னைச் சேர்த்துவிட்டதில் தனது தந்தைக்கு ஆயிரம் செலவுகளும் தனக்கு ஆயிரம் இன்னல்களும் நேர்ந்தன என்று நொந்துரைக்கிறான்.

நமது பள்ளி கல்லூரிக் கல்விகள் தாய்மொழியின் மரபார்ந்த புழக்கத்தை ஒட்ட ஒழிப்பதில் பங்காற்றி வருகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னமே அதனை பாரதி சுட்டியிருக்கிறான். ’போகின்ற பாரதத்தைப் பழித்தல்’ என்றொரு கவிதையில் “வீட்டு பாஷை கற்கிலாய் போ போ போ” என்று தூற்றுகிறான்.

வீட்டு பாஷை என்பது என்ன? என்று என்னிடம் மாணவன் ஒருவன் வினவினான். அவன் வீட்டில் கொள்ளுப் பாட்டியோ  கொள்ளுத் தாத்தாவோ இருக்க வேண்டுமே? இன்றைய தாத்தாக்களிடம் பாட்டிகளிடம்கூட வீட்டு பாஷை என்பதில்லை. நான் அவனுக்கு லா.ச.ரா, தி.ஜா போன்றோரின் கதைகளிலிருந்து உதாரணங்கள் உரைத்தேன். “ஓடுற பாம்புக்குக் கால் எண்ணிப்பிடுவர்”, “வந்துட்டானே, கழுகுக்கு மூக்குல வேத்த மாதிரி” என்பன போன்ற சொலவடைகள். பருமனான உடல் கொண்ட ஒருவனைப் பற்றிச் சொல்வதெனில், “அழிச்சா நாலு ஆளு செய்யலாம்” என்று சொல்வார்கள். எவ்வளவு கவிநயமிக்க புழக்க பாஷைகள்! இன்னிக்கு அவை போன இடம் தெரியல.

என் பாட்டி எண்பதைத் தொடப் போகிறார். நான் சிறுவனாக இருந்தபோது அவரிடம் இருந்த பாஷையை இப்போது கேட்கக் கிடைக்கவில்லை. ”ஜல்தி கெளம்பு” என்பது ’சீக்கிரம்’ ஆகிவிட்டது. பேச ஆளின்மையால் அவரிடமே வீட்டு பாஷை மெல்ல மறைந்துவிட்டது. நானும் வரித்துக்கொள்ளவில்லை. இப்போது நினைக்கப் பெரிய இழப்பாகத் தோன்றுகிறது.

வீட்டு பாஷையைக் கிளப்பி விட்டு அவ்விடத்தில் ஊனர் கல்வியின் தேய்வழக்குகள், “குட் மார்னிங் – குட் ஈவ்னிங் – குட் நைட் – ஹௌவார்யூ – நோ தேங்க்ஸ் – சார்ரி” இத்தியாதிகள், வந்தமர்ந்து ஆள்கின்றன. எல்லாம் கணினி நிரலின் கட்டளைகள் போல் – ஆம்பிக்யூட்டி இல்லாத நேரடி விளம்பல்கள். ஒன்றிலும் கவித்துவ அழகு இல்லை. அர்த்த பாவங்களின் அடுக்குகள் சிடுக்குகள் ஏதுமில்லை. மொழியே மொன்னையாகி வருகிறது. 

சரி. சுடர் மிகும் அறிவு என்று பாரதி சொன்னது எதனை? “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றாரே வள்ளுவர், அதுதான். மெய்யறிவு. மெய்ஞ்ஞானம் என்றெல்லாம் சுட்டப்படுவதுதான்.























”உண்மையே விடுதலை செய்கிறது. விடுதலைக்கான உனது முயற்சி அல்ல” என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

அதாவது, உண்மையை நீ அறியும்போது அது உன்னை விடுதலை செய்கிறது என்று பொருள். உனக்கு விடுதலை நல்காத எந்தவொரு அறிவும் உண்மை அல்ல.

“விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே” என்கிறான் பாரதி. சிட்டுக்குருவி எப்படி சுதந்திரமாக இருக்கிறது. அதனிடம் சுடர் மிகும் அறிவு இயற்கையிலேயே இருக்கிறது. பள்ளிக்கோ கல்லூரிக்கொ சென்று அந்த இயல்பறிவை அது கெடுத்துக்கொள்ளவில்லை.

எதனிடமிருந்து விடுதலை? என்னும் கேள்வி எழுகிறது. சைவ சித்தாந்த பரிபாஷையில் கூறுவதெனில், பசுவைப் பாசத்திடமிருந்து விடுவித்துப் பதியிடம் சேர்த்தலே விடுதலை. (பாசத்திற்குச் சுயாதீனம் உண்டா? தளைப்படுத்தும் ஆற்றல் அதற்கே உண்டா? இல்லை. பதியே கட்டுவான்; பதியே அவிழ்ப்பான்!)

“உண்மையே உன்னை விடுதலை செய்யும்” என்றுரைத்தால் அதனை ஆத்திகரும் ஏற்பர் நாத்திகரும் ஏற்பர். வலது இடது சிந்தனைவாதிகள் இருவருமே ஏற்பர். ஆனால் இரு தரப்புகளும் அதற்குத் தரும் விளக்கம் வெவ்வேறாக இருக்கும். அவ்விரண்டில் எவ்விளக்கம் சரியானது? இரண்டுமேதான். ஒவ்வொன்றும் அதனதன் தளத்தில் சரியாக உள்ளன.

பருவுலகால் மனிதன் கட்டமைத்திருக்கும் தளைகளிலிருந்து விடுதலை அடைதல் பற்றி இடதுசாரிகள் பேசுகின்றனர். பருவுலகின் இயல்பு நம் மீது ஏற்படுத்தும் தளைகளிலிருந்து விடுதலை அடைதல் பற்றி வலதுசாரிகள் பேசுகின்றனர். (வலதுசாரிகள் முன்னதை மறுதலிக்கையிலும் இடதுசாரிகள் பின்னதை மறுதலிக்கையிலும் அத்தரப்புகளின் நேர்மை கேள்விக்கு உள்ளாகிறது).

பாரதியின் கவிதை வரிகளை நேற்று அசை போட்டபோது “சுடர் மிகும் அறிவு” இப்படிப் புலம்புமா? என்று எண்ணினேன். அது விடுதலை நல்கும் அறிவு அல்லவா? அதற்கு எதிரான நிலை ஒன்றுண்டு. அது இடர் மிகும் அறிவு.

நேற்று அடியேனுக்குக் கடுமையான ஒருபக்கத் தலைவலி. விளக்கணைத்து அரவணைப்பான இருளில் கண்கள் மூடிக் கட்டிலில் அமர்ந்திருந்தேன், தலையணைகளில் சாய்ந்தபடி. ”வாணி ராணி” என்னும் பெருந்தொடர் (மெகா சீரியல் என்பதன் தமிழறிக) தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது மனத்தில் தோன்றிற்று, ‘இந்தத் தயாரிப்பாளருக்கு வெகுஜனத்தின் மனநிலை நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஒரு பெருந்தொடரை வெற்றி பெறச் செய்ய அது மட்டும் போதாது. தமிழக வெகுஜனத்தின், குறிப்பாகத் தாய்க்குலத்தின் அறிவு நிலை என்ன என்பதையும் துல்லியமாக அறிந்திருக்கிறார். அபத்தம் என்பது அதற்கு அமிர்தம் என்பதை அறிந்திருக்கிறார்”.

இப்படியாக யோசனை அனிச்சை கதியில் ஓடும்போதே மண்டையில் விண்ணென்று நாடி போல் வலி துடித்தது. ஒரு எழவு சீரியல் எப்படிப் போனால் என்ன என்றிருக்க முடிகிறதா? சொல்லறச் சும்மா இரு மனமே என்றிருக்க இயல்கிறதா? இடர் மிகும் அறிவு!

பன்னூறு ஆண்டுகளாகக் கீழைத் தேயச் சமயங்கள் போதித்தது சுடர் மிகும் அறிவையே. சமயம் என்பதன் நோக்கம் மெய்யறிதலே. அதைச் சாதிப்பதற்கான பல்வித இயங்கு முறைமைகளின் கட்டமைப்பே சமயம்.

இன்று, கீழைத்தேய பழஞ்சமய அறிதல் முறைகளின் பக்கம் கவனம் செலுத்திவரும் மேலைத்தேய அறிவுலகம் பொய்யறிவின் சேகரத்திற்கு எதிரான எதிர்க்கற்றலை (unlearning) முன்னிறுத்திப் பேசுகிறது.

அறியாமை என்னும் நிலையே துயரின் ஊற்று என்பது கீழைத்தேயச் சிந்தனை மரபு தரும் விழிப்புக்களில் ஒன்று. அறியாமை என்பதிலிருந்து பொய்யறிவை நோக்கிச் செல்வது என்பது அதனினும் பெருந்துயர். இடர் மிகும் அறிவை முயன்று கற்பதினும் கல்லாதிருத்தலே நன்று.  அறியாமையிலிருந்து மெய்யறிவை நோக்கிச் செல்ல வேண்டும். சுடர் மிகும் அறிவினை அடைதல் வேண்டும்.

சுடர் மிகும் அறிவு யாது செய்யும்? பாரதியின் வரிகளில் பகர்வதெனில்,  பயிற்றிப் பல கல்வி தந்து இப்பாரினை உயர்த்தும்; பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலிக்கும்.

No comments:

Post a Comment