Thursday, May 31, 2012

ஒரு மெல்லிசையைப் போல்




உருமாறிக் கொண்டிருந்த மேகத்தில்
உன் சாயல் தெரிந்தபோது
வந்தது மழை
கண்களில்

அறிஞர்களுக்கு
ஆயிரம் நூல்கள்
காதலனுக்கோ
உன் பெயர் மட்டும்

’கனவில் வருவேன்’ என்ற உன்
வாக்குறுதியின் மகிழ்ச்சியில்
இரவெல்லாம் போனது
தூக்கம் இல்லாமல்

நீ வருவாய் என்ற எதிர்பார்ப்பே
நினைவில் கனவாய் ஆனது.

தவறுகளே இல்லை என்று
கோபித்துக் கொள்கிறாய்…
கோபப்படும் உன் உரிமையை
எதுதான் தடுக்கும்?

சபைக்குள் நுழைகிறாய்
ஒரு மெல்லிசையைப் போல்
அதிகரிக்கிறது என் இதயத்தில்
தாளத்தின் கதி

ஒரேயொரு விழியசைவில்
எழுதிவிடுகிறாய்
ஒருவனின் வாழ்க்கையை
அல்லது அழித்துவிடுகிறாய்
அத்தனை பக்கங்களையும்

இன்று கனவில் மீண்டும்
உன் வீதியில் அலைய
விதிக்கப்பட்டுள்ளேன்…
ஆஹா, எவ்வளவு பெரிதாய்
மதிக்கப்பட்டுள்ளேன்!


No comments:

Post a Comment