Monday, February 5, 2018

சூஃபித்துவம் – உயர் உளவியல்



ஷைக் ஹிஷாம் கப்பானி


       










      மாபெரும் அறிஞர்களில் ஒருவரான ஷைகு அஹ்மத் ஸர்ரூக் அண்மையில், அதிக காலத்திற்கு முன் அல்ல, ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன், சொன்னார்கள்: “சூஃபித்துவம் என்பது அறிவுடன் ஒத்திசைந்து இயங்கும் வகையில் இதயத்தை அதனுடன் இணைப்பதற்கான ஒரு கலையாக வடிவமைக்கப்பட்டது.”
      அது, இஸ்லாத்தின் நல்ல பண்புகளையும் நடத்தைகளையும் தூய்மையாகக் கட்டி எழுப்புவதுதான்.
      உளவியலைப் போல, அது ஏன் முக்கியமாகிறது? ஏனெனில், உன் இதயத்தை அல்லது மக்களின் இதயங்களை, அவர்களின் பண்புகளை நடத்தைகளை, உனது பண்புகளை நடத்தைகளைத் தூய்மை செய்து நிறுத்துவது எப்படி என்பது பற்றிய உனது புரிதலை அது வளர்க்கிறது.
      ஆங்கிலத்தில் சைக்காலஜி என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஃபிரெஞ்சு மொழியில் சைக்கொலோக். நல்ல பண்புகளை வைத்திருப்பது மற்றும் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி என்பது பற்றிய அறிவியல்தான் அது.
      ஒத்திசைவை உண்டாக்குவதற்காக அறிவுக்கும் இதயத்திற்கும் இடையில் வேலை செய்கின்ற ஒரு ”கியர்பாக்ஸ்” போன்றது அது. எனவே, அது அறிவு தனித்தும் இதயம் தனித்தும் வேலை செய்வது அல்ல. நினைவுமனம் மட்டுமோ அல்லது உபநினைவு மனம் மட்டுமோ பேசுவதும் அல்ல. மாறாக அஃதொரு ஒத்திசைவு அமைப்பு. நினைவு மனத்தைப் பேசவிட்டு உபநினைவு மனத்தை நீங்கள் பின்னுக்குத் தள்ளுவது அல்ல அது. அவ்விரண்டையும் நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும்.
      சூஃபித்துவ ஞானத்தின் முதன்மையான அம்சங்களில் இதுவும் ஒன்று: உங்கள் அமைப்பை நீங்கள் சீர்ப்படுத்த வேண்டும் என்பது. உங்களைச் சூழ்ந்துள்ளவற்றை நீங்கள் காண முடிந்த உங்களின் நினைவுக்கும் உங்களால் காணமுடியாத நினைவிலிக்கும் இடையில் ஒரு சமனத்தை (Balance) ஏற்டுத்துவது. அது உங்களுக்குள்தான் இருக்கிறது. உங்களின் இதயத்தில் புதைத்துள்ளது, நடப்பட்டுள்ளது.
      இருப்பினும், எதிர்மறையான சக்திகளின் பல வருட பாதிப்பால் நீங்கள் உங்களின் நினைவிலியை மேலும் மேலும் திரையிட்டுக்கொண்டே வந்துவிட்டீர்கள். எனவே அது இருப்பதையே உங்களால் பார்க்க முடியவில்லை. உங்களைச் சூழ்ந்துள்ளவற்றை மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள்.

No comments:

Post a Comment