Friday, May 24, 2013

ஈர மை




’கரையில் நின்ற
காதலை
அழித்துப் போனது
அலை’
என்றேன்

‘அழைத்துப் போனது
அலை’
என்றாள்
*

சிகிச்சை பலனின்றி
மீண்டும் மீண்டும்
பிழைத்துக் கொள்கிறது
மனம்
*

‘எதற்காகக் கொண்டுவந்தாய்
என்னை?’ என்றேன்

‘நீ இல்லாதிருந்ததை
நினைப்பதற்காக’
என்றாய்
*

காதலின் யாத்திரையில்
உன்னிடம் வரும் பாதையும்
உன்னிடம் வரும் பயணி
*

உன் வேதனைப் புலம்பல்கள்
தெய்வீக கீதமல்ல...
குழலாகும் மூங்கில்
சப்தமிடுவதில்லை
துளை செய்யும்போது
*

கண்கள் போதிக்கும்
காதல் ரகசியங்கள்
புத்தகங்களில்
புலப்படுவதில்லை...

காகிதத்தில்
காய்ந்துபோய்விடும் மை
கண்களில் இருக்கின்றது
ஈரமாக
*

நறுமணம் உன்னில்
வார்த்தைகளாகி
வருகின்றபோது
பனித்துளிகள்
என்
கண்களின் காணிக்கை
*

விடியலுக்காகப்
பிரார்த்தனை செய்தது
விளக்கு
இரவெல்லாம்...

ஏற்றிவிட்டுப்
பிரிந்து சென்ற நீ
அணைப்பதற்காவது
வருவாய் என்று
*

உனக்கேதும்
உவமை சொன்னால்
கோபம் கொள்வாயோ?

உன்னைப் போல் இருக்கிறாய்
என்று சொல்லவும்
அஞ்சுகிறேன்

1 comment: