Tuesday, March 6, 2012

வெளியேற்றத்தின் உள்ளே




சமீபத்தில் மிகவும் ரசித்துப் படித்த நாவல் யுவன் சந்திரசேகர் எழுதிய “வெளியேற்றம்.” யுவன் கால தேச எல்லைக்கோடுகள் கரையும் தருணங்களைத் தன் எழுத்தில் பதியவைத்துக் காட்டுவதில் பிரசித்தி பெற்றவர். அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எல்லாவற்றிலும் இந்தத் தன்மை உண்டு. இந்த நாவலும் அதற்கு ஒரு நல்ல சான்று. ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நாவல் என்று இதைப் பரிந்துரைக்கத் தோன்றுகிறது.

நாவலில் தொடர்ந்து கால-இட வெளியின் பொது விதிகளைக் கடந்த ஒரு இழை தட்டுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதனை நமக்கு உணர்த்திக் காட்டும் சம்பவங்கள் சாதாரணமான சம்பவங்களின் ஊடே வெகு இயல்பாகவே நிகழ்ந்து வருகின்றன. ஆக இருவகையான சம்பவங்கள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன என்று தெரிகிறதா? இதில் விசேஷம் என்ன என்று கேட்கலாம். அதை யுவனே இந்த நாவலின் முடிவுரையில் சொல்கிறார் கேளுங்கள்:
“இந்த நாவலில் வருகிற மாய நிகழ்வுகள் – நடைமுறை சாத்தியத்துக்கு அப்பாற்பட்டவையாகத் தென்படுகிறவை – அனைத்துமே நிஜமாக நிகழ்ந்தவை. வலுவான சாட்சியங்களும், சான்றுகளும் உள்ளவை. தன்னியல்பான, நடைமுறை சாத்தியம் உள்ள நிகழ்வுகள் அனைத்துமே கற்பனையானவை!
என்ன செய்ய, தனிமனித அகவுலகத்துக்கு இப்படி ஒரு பரிமாணமும் இருக்கத்தான் செய்கிறது – நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.”

யுவனின் கதை சொல்லும் முறை பொதுவாக நான்லீனியர் தன்மை கொண்டது. சம்பவங்கள் காலக் கிரமத்தில் அமைந்திருக்காது. முக்காலக் கூறுகளும் கலைக்கப்பட்டு மாறி மாறி வந்துபோய்க் கொண்டிருக்கும். அதனால் ஐநூறு பக்கம் கொண்ட நாவலின் கதை நமக்குப் பிடிபடுவதற்குக் குறைந்தது நூறு பக்கங்களையாவது தொடர்ந்து படிக்க வேண்டும். இதனால் பொறுமையைச் சோதிக்கும் என்று பொருளல்ல. இரண்டு மூன்று பக்கங்களிலேயே கதை நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. இலக்கிய சிடுக்குகள் எதையும் அறியாத என் சகதர்மினி இதோ இந்த நாவலைப் படித்து முடிக்கப் போகிறாள்.

கதையில் பல ஆன்மிக மரபுகளின் செய்திகள் வருகின்றன. பெயர் சொல்லிப் பரிந்துரைக்கப் படுபவர் என்றால் ஜே.கிருஷ்ணமூர்த்தி மட்டுமே. ஆனால் ஜென், யோகம், சித்தர் மரபு, சூஃபித்துவம் என்று பல ஆன்மிக நெறிகளின் வாசிப்பு யுவனுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை இந்நாவல் காட்டுகிறது. மிகுந்த உழைப்பைக் கோரியிருக்கும் இந்த நாவலில் அவர் பல காலங்கள் படித்து வந்த ஆன்மிகச் சிந்தனைகள் தங்கள் லேபில்களை இழந்து வாழ்க்கையில் கலந்து வெளிப்பட்டுள்ளன என்று காண்கிறேன். அவ்வகையில் நான் கண்டு ரசித்தவற்றுள் சிலவற்றை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்.

வேதம் என்னும் சீடனிடம் அவனது குரு தன் பூர்வாசிரம வாழ்க்கையை விவரித்துக் கொண்டிருக்கிறார். தான் சந்தித்த அபூர்வமான ஒரு ஞானியைப் பற்றிச் சொல்கிறார். அப்போது நடக்கும் உரையாடல் இது:
”அவரோடயே கிளம்பிவிட்டீர்களா?
அட அட. அவர்களெல்லாம் மகான்கள் வேதம். பரப்பிரும்மம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே, அது. நம்மை மாதிரிச் சாதாரணர்கள் அண்ட முடியாது. நெருப்பை ஈ மொய்க்க முடியுமா என்ன?
குரு சிரித்தார்.”

இந்த உரையாடலில் குரு சொல்கிறாரே ‘நெருப்பை ஈ மொய்க்க முடியுமா என்ன?’ என்று. இந்த வாக்கியம் அப்படியே சூஃபி ஞானி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தன் இளம் வயதில் தனது குருநாதரான ஹழ்றத் ஹம்மாத் அவர்களை முதன்முதலில் சந்தித்தபோது அவர் சொன்னது. ஹம்மாத் அவர்கள் சர்பத் வியாபாரி. தள்ளுவண்டியில் தன் சரக்குகளை வைத்துக் கொண்டு அவர் தெருவில் வருகிறார். அதில் ஒரு ஈக்கூட மொய்க்கவில்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அது பற்றி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் வினவுகிறார்கள். அப்போது ஹம்மாத் சொல்கிறார்: “நெருப்பில் ஈக்கள் மொய்ப்பதில்லை தம்பி.”

ஏப்ரல் 1964 என்று தலைப்பிட்டு ஆரம்பிக்கும் அத்தியாயத்தில் போகிற போக்கில் ஒரு வருணனையைச் சொல்லிச் செல்கிறார் யுவன்:
“இருட்டு நன்றாகக் கவிந்துவிட்டது. ‘ரேகை தெரியாத இருட்டு’ என்று சொல்வாள் அம்மா – என்னமோ, கடிகாரத்தில் மணி பார்க்கிறதுபோல, அடிக்கடி ரேகையைப் பார்க்கிற அவசியம் இருக்கிற மாதிரி.”

இருட்டைப் பற்றிய இந்த வருணனை – ‘ரேகை தெரியாத இருட்டு’ – என்னை ஒரு கணம் சுண்டி இழுத்துவிட்டது. மிக இயல்பாக வந்து விழுந்திருக்கும் இந்த வருணனை மிக அசாதாரணமான பரிமாணம் கொள்ளும் ஓர் இடத்தை நான் அறிவேன். எந்த இடம் என்று கேட்கிறீர்களா? அதைத் திருக்குர்ஆன் சொல்கிறது பாருங்கள்:
“அல்லது (அவர்களின் நிலை)
ஆழ்கடலில் பல இருள்களைப் போன்றதாகும்;
அதனை ஓர் அலை மூடுகிறது.
அதற்கு மேல் மற்றோர் அலை;
அதற்கும் மேல் மேகம்.
பல இருள்கள்.
சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன.
அவன் தன் கையை வெளியே நீட்டினால்
அவனால் அதைப் பார்க்க முடியாது.
எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ
அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.”
(24:40)

அனாதை இல்லம் நடத்தி வரும் கோவர்த்தனம் என்று ஒரு கதாப்பாத்திரம் சொல்வதாக ஒரு பாரா வருகிறது (பக்:235,236):
“… இந்த வளாகத்துக்கு வந்து பத்து வருஷமாகிறது. அதற்கு முன்னால் நகருக்குள் ஒரு சிறு ஓட்டு வீட்டில், பத்துக் குழந்தைகளுடன் இருந்தேன். மாதா மாதம் குற்றாலிங்கம் அரிசிமூட்டையும் தானியங்களும் கொடுத்தனுப்புவார். சில மாதங்கள் அவரே எடுத்து வருவார். திடீரென்று ஒருநாள் பெரியவர் ஸ்ரீவேதமூர்த்தி வந்தார். அவருடன் இன்னொருவரும் வந்தார். ஈரோட்டுக்காரர். தொழிலதிபர். ஸ்ரீ.சுத்தானந்தம் என்று பெயர் சொன்னார். இருவருமாக என்னை இந்த வளாகத்துக்கு அழைத்து வந்தார்கள். எனக்கு மூச்சடைத்துவிட்டது. கடையில் கிடைக்கிற அரிசியை வாங்கி சுலபமாகச் சமைத்துவிடுகிறோம். உழுவதிலிருந்து அறுவடை வரை எத்தனை கைகள் நமக்காக உழைத்திருக்கின்றன… என்றோ நாம் சாப்பிடவிருக்கும் ஒரு கவளம் சோற்றுக்காக இந்த நிமிடம் வரை எத்தனை உயிர்களும் நுண்ணுயிர்களும் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றன….
கோவர்த்தனத்தின் குரல் இளகியிருந்தது.
…கடையில் கிடைக்கிற அரிசி மாதிரி இந்த மொத்த வளாகமும் என் கைக்கு வந்து சேர்ந்தது.”

இந்தப் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் உவமையைப் படித்ததும் இமாம் சாஅதி எழுதிய குலிஸ்தானில் வரும் இதே கருத்து எனக்கு ஞாபகம் வந்தது. ‘உன் தட்டில் இருக்கும் ஒரு கோதுமை ரொட்டிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்து. அது உன் தட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக சூரியன், சந்திரன், பூமி மற்றும் கோளங்கள் எல்லாம் முறையுடன் சுழன்று கொண்டுள்ளன’ என்று அவர் சொல்கிறார்.

முதலில் படித்தவுடன் இக்கருத்தின் ஆழம் சட்டென்று புரியவில்லை. இவர் என்ன சொல்கிறார். இதோ என் முன் உள்ள தட்டில் கிடக்கும் ஒரு சப்பாத்திக்கும் சூரியன் சந்திரன் சுழற்சிக்கும் என்ன சம்பந்தம்? என்றுதான் கேட்கத் தோன்றும். நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

அதாவது என் முன் உள்ள தட்டில் இருப்பது கோதுமை ரொட்டி. கோதுமை மாவால் அது செய்யப்பட்டுள்ளது. கோதுமையை மாவாக அரைத்தது ஒருவரின் உழைப்பு. அதை பேக்கிங் செய்தது ஒருவரின் உழைப்பு. அது லாரியில் ஏற்றப்பட்டு பல ஆயிரம் மைல்கள் தாண்டிக் கடைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்தக் கோதுமை மணிகள் எந்த மண்ணில் விளைந்தன. அதைப் புடைத்து நிறுத்துச் சாக்கில் கட்டியது எத்தனை பேர்? அதைக் களத்தில் அடித்தெடுத்தவர்கள் எத்தனை பேர்? அதை வயலில் இருந்து அறுத்தவர்கள் எத்தனை பேர்? வயலில் அது விளைந்து வர உழுது விதைத்து நீர் பாய்ச்சியவர்கள் எத்தனை பேர்? சரியான சீதோஷ்ண நிலை இல்லாவிட்டால் அது தானியமாகாமல் சாவியாகிப் போயிருக்கும். பருவகால நிலைகள் தோதாக இருந்தது எதனால்? பூமி சூரியன் சந்திரன் கோளங்கள் எல்லாம் சீராகச் சுழன்று கொண்டிருப்பதால்!

ஹரிஹரசுப்ரமணியம் என்னும் கதாப்பாத்திரம், கண் பார்வை இல்லாதவர், தன் குருநாதரான ஸ்ரீவேதமூர்த்தியைப் பற்றிச் சொல்லும் ஒரு இடம் (பக்.300,301):
“ஆக, இந்த உள் உலகம் இருக்கால்லியா, பார்வையைப் பொறுத்த மட்டிலே, ஒங்களோட உள் உலகத்துக்கும் என்னோட உள் உலகத்துக்கும்தான் கொடுக்கல் வாங்கல்.
…பெரியவர் மாதிரி மகான்களோட உத்தேசமே வேறே. நமக்கு தரிசனமாகிற இந்த வஸ்து உலகம், உள் உலகம் ரெண்டுக்கும் வெளியில் இருந்துண்டு தன்னுடைய இருப்பை உணர முடியுமா?ங்கறது. அதெல்லாம் ராஜாளிகள் சுத்தற ஆகாசம். நம்மளை மாதிரிச் சிட்டுக்குருவிகள் வெறுமனே பாக்கத்தான் முடியும் அந்த உசரத்தையெல்லாம். இதுக்கே விலாவெல்லாம் நோகறது…”

இந்த வரிகளைப் படித்ததும் முதலில் அல்லாமா இக்பாலின் கவிதை வரிகள்தான் ஞாபகம் வந்தன. அவருடைய கவிதையியலில் ராஜாளி (ஷாஹீன்) என்பது முக்கியமான ஒரு குறியீடு. இக்பாலின் ஒட்டுமொத்தக் கவிதையியலையே ஷாஹீனிய்யத் – ராஜாளியியம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, அதிமனிதன் என்பதற்கு ராஜாளியும், சராசரி மனிதன் என்பதற்குச் சிட்டுக்குருவியும் குறியீடாக அவரது கவிதைகளில் வருகின்றன. “ஊர்க்குருவிக்கு ராஜாளியின் சக்தியைக் கொடு” என்று ஒரு பிரபலமான பிரார்த்தனையை அவர் இயற்றியிருக்கிறார்.

அடுத்ததாக நியாபகம் வந்தது நாகூர் ரூமியின் ‘திராட்சகைகளின் இதயம்’ நாவலில் வரும் ஒரு பகுதி. ஹஜ்ரத் மாமா என்பவர் – வேறு யார், அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்களேதான் – சூஃபி குரு. அவரின் சீடர்களுடன் தன் வீட்டில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது கரண்ட் கட் ஆகிறது. இரண்டு முட்டை விளக்குகளை ஏற்றி வந்து ஒன்றை அவரின் முன்னாலும் மற்றொன்றை அவரின் பின்னாலும் வைக்கிறார்கள். அப்போது தாதா என்கிற சீடர் வருகிறார். அவர் வந்து அமர்ந்ததும் ஹஜ்ரத் மாமாவுக்கு முன்னால் இருந்த முட்டை விளக்கு அணைகிறது. ஹஜ்ரத் அதை முறைத்துப் பார்த்ததும் அந்த விளக்கு மீண்டும் ஜுவாலை பற்றி எரிகிறது. இது எப்படி என்று வியக்கும் தாதா, ஒருவேளை அந்த விளக்கு சரியாக அணையாமல் இருந்து பின் காற்றில் பற்றி எரிந்திருக்கக் கூடும் என்று சந்தேகப்படுகிறார். ஹஜ்ரத் மாமா அந்த விளக்கை எடுத்து ஊதி அணைத்துவிட்டு நன்றாக அணைந்துவிட்டதா என்று அவரைப் பார்க்கச் சொல்லிவிட்டு, மீண்டும் முறைத்துப் பார்க்க அந்த விளக்கு ஜுவாலை பற்றி எரிகிறது! இதைப் பற்றி ஆச்சரியப்பட்டு வினவும் ஜுனைதிடம் மாமா சொல்கிறார்:
’மொதல்ல, ஆச்சரியப்படுறது வுடு. ஆச்சரியப்படுறது ஹராம். நா ஏற்கனவே சொல்லியிருக்கேன். எதைப் பாத்து நீ ஆச்சரியப்படுறியோ, அதெ அடையுற தகுதி எனக்கு இல்லேன்னு ஒம்மனசு பேசுறதா அர்த்தம்.’

இவ்வாறு பல ஆன்மிகப் பாடங்களை நுட்பங்களைத் தன் சீடர்களுக்கு மாமா சொல்லித் தருகிறார். தான் மதறஸாவில் ஓதும் காலத்திலேயே ஒரு முக்கியமான புத்தகத்தை எடுப்பதற்காகப் பார்வையாலேயே அலிகார் பூட்டை உடைத்த சம்பவத்தையும் சொல்கிறார். அதே போல்தான் இப்போது விளக்கை ஏற்றியதாகவும் சொல்கிறார். இப்படி நகரும் அத்தியாயத்தின் இறுதியில் மேலே நாம் ‘வெளியேற்றம்’ நாவலில் கண்ட பாய்ண்ட் வருகிறது (பக்.105,106):
’இந்த பாரு ஜுனைத், ஒன்னெ மொதல்லெ புரிஞ்சுக்க. நாமலும் நமக்கு வெளியில உள்ள பொருளும் ஒன்னுதான். நம்மோட எக்ஸ்டென்ஷன்தான் இந்தப் பிரபஞ்சம். நமக்கும் நமக்கு வெளியில் உள்ள பொருளுக்கும் எடையில தொடர்பு இல்லேன்னுதானே நெனக்கிறே? தொடர்பு இருக்கு. ஆனா கண்ணுக்குத் தெரியல. அவ்வளவுதான். அதெ அனுபவத்துல புரிஞ்சுக்கும்போது, அந்த ‘லிங்க்’கெ ஒணரலாம். அப்ப கண்ணால பூட்டெ தெறக்கலாம். லைட்டெ ஏத்தலாம். இங்கெ உக்காந்துகிட்டே அங்கெ உள்ள ஸ்விட்ச்செ போடலாம். எல்லாம் செய்யலாம், வெளங்குதா?’
நான் மவுனமாக இருந்தேன். ஆனால் அவர் பேசியதை எல்லாம் வழக்கம்போல் பதிவு செய்து கொண்டிருந்தேன்.
‘நீ அப்புடீங்குறது ஒரு வட்டம். அறிவு ஒரு வட்டம். நா ஒரு வட்டம். நாம மூனு பேரும் தனித்தனி வட்டங்கள். ஆனால் நம்ம மூனு பேரையும் எணைக்கிற ஒரு பெரிய வட்டத்துக்குள்ள நாம மூனு பேரும் இருப்பதா கற்பனை பண்ணு. அப்புடிப் பண்ணப் பண்ண, அது கற்பனையல்ல, நம்ம எல்லாரையும், எல்லாத்தையும் எணைக்கிற ஒரு பெரிய வட்டம் ஒன்னு இருக்குதுங்குறது உண்மைதான்னு புரிய ஆரம்பிக்கும். அப்ப, எம் மனசுல உள்ளது ஒனக்கு வரும், ஒம்மனசுல உள்ளது எனக்கு வரும். நாம மூனு பேரும் ஒன்னுதான், நா வேற நீ வேற அல்லங்குற உண்மெ அப்பதாம் புரியும், வெளங்குதா? செத்த அமுக்கி வுடுறீங்களா’ என்று கேட்டுவிட்டு எழுந்து கொண்டார்.
அமுக்கி விடச்சொல்லும் மாமா உள்வட்டத்தில் இருந்து பேசியவர். கண்களால் விளக்கை ஏற்றிய மாமா வெளி வட்டத்தோடு இணைந்தவர்.
விளங்கியது.”

கதையில் யுவன் பெயர் சொல்லிப் பரிந்துரைக்கும் ஒரே ஆன்மிக ஆளுமை ஜிட்டு கிருஷ்ணமூர்த்திதான் என்று சொன்னேன் அல்லவா? அனாதை இல்லம் நடத்தும் கோவர்த்தனம் சிறு வயது முதலே ஓர் அனாதை இல்லத்தில்தான் வளர்கிறார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட பிறகு அங்கே இருக்க மனம் இன்றி வெளியேறி இந்தியா முழுதும் சுற்றி அலைந்து ஒரு பத்து வருடங்கள் கழித்து வந்து அந்த அனாதை இல்லத்தின் சாமியாரை அவர் மரணப்படுக்கையில் கிடக்கும் நிலையில் சந்திக்கிறார். அந்த சாமியார்தான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் படிக்கும்படி இவருக்குப் பரிந்துரைப்பது. ஸ்வாரஸ்யமான அந்தப் பகுதி (பக்.435,436):
“…குழப்பமாக இருக்கிறது அல்லவா? கைகூப்பி வெறும் வணக்கம்தானே சொன்னோம்? இவர் நம்மைப் பற்றி முழுமையான அபிப்பிராயம் ஒன்றை உதிர்க்கிறாரே என்று தோன்றுகிறதா? ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி படித்திருக்கிறாயா?
’இல்லை’ என்று தலையசைத்தேன்.
உன் வயதில் ஒருத்தன் படித்தாகவேண்டிய ஆளுமை அவர். பால்யத்தின் முடிவில் கொந்தளிக்கத் தொடங்குகிற ரத்தத்தில் வெம்மையும் ஏறுகிற பிராயம் உனது. இந்தக் கட்டத்தைத் தாண்டும் போதும், தாண்டிய பிறகும் ஒருவித சமனம் மனத்தில் நிலவுவதற்கு அவர் உதவுவார்….
ஸ்ரீ.ஸவ்யசாச்சி முகர்ஜி மிகப்பெரிய வாசகர் என்பது எனக்கு முன்பே தெரியும். ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடந்தபோதும், தலை மாட்டில் இருந்த சிறு மேஜையில் சீராக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின்மேல் என் பார்வை சென்றது. மேலாக இருந்த புத்தகத்தின் அட்டையும், அதன் தலைப்பும் இன்னமும் எனக்குள் பசுமையாக நினைவிருக்கிறது. I AM THAT. எழுதியவர் நிஸர்கதத்த மஹராஜ்.
…அவர் வழங்கிய தாரக மந்திரம் என்று நான் பெற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான். Pay Attention. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லாக் காலங்களிலும் எல்லா தேசங்களிலும் செலவாணியாகக் கூடிய ஒரே கரன்ஸி அது…
சாமியார் சிரித்தார்.
…வெகு சுலபம். எளிமையான தர்க்கம்தான் – கடைசியாக உன்னை நான் வழியனுப்பிய தருணத்தில் இருந்த அதே வேட்கையும் கனிவும் உன் விழிகளில் இருக்கிறது. மனத்தை முழுவதுமாகக் காட்டக்கூடிய ஜன்னல்தாம் கண்கள். மனித உடல் உருவானபோது கடைசியாக உதித்த புலன் பார்வைதான், தெரியுமா? அதனால்தான் வெளிப்படையான சிறு குழந்தைபோலச் செயல்படுகிறது அது…”

ஜே.கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி இப்படி வெளிப்படையான குறிப்பு இருந்தாலும், அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவரைப் போலவே உலகம் முழுவதும் சாதகர்களைத் தன் விளக்கங்களால் கவர்ந்த ஆன்மிக ஆளுமையான, சொல்லப் போனால் ஜே.கேவைவிடப் பல மடங்கு ஆரவாரமும் கலவரமும் மிக்க பேச்சுக்குச் சொந்தக்காரரான ஓஷோவைப் பற்றி வெளிப்படையாக எங்கும் சொல்லப்படவில்லை என்றாலும் சில வரிகள் எனக்கு அவரையே நினைவூட்டுகின்றன.

கோவர்த்தனம் சொல்லும் இந்த வரிகள் (பக்.234):
“நான் முன்பு சொன்ன மகாதர்க்கம் காரணமேயின்றி சில மனிதர்களை ஆயூள்பூராவும் வதைத்துத் தீர்க்கிறது. என்னைப் பொறுத்த வரை காரணமேயில்லாமல் அது என்னை அபரிதமான கருணையுடன் நடத்தியிருக்கிறது என்றுதான் நம்புகிறேன்.”

இந்த வரிகளில் எனக்கு ஓஷோ சொன்னதுதான் நியாபகம் வந்தது: “வாழ்க்கை என்பது பூக்களும் முட்களும் பரப்பப்பட்ட பாதை என்று எல்லோரும் சொல்கிறார்கள். அது எனக்குத் தெரியாது. எனக்கு வாழ்க்கை எப்போதுமே பூக்கள் பரப்பப்பட்ட பாதையாகவே இருந்து வந்துள்ளது.”

மன்னாதியுடன் சந்தானம் உரையாடும் பகுதி (பக்.322):
“அவங்கல்லாம் எந்த ஊர்க்காரங்க?
என்னா கேள்வி கேட்டீங்க போங்க. தலைக்கி மேலெ போற மேகத்தெ நிறுத்தி ‘யப்பா ஒனக்கு ஊர் எது’ன்னு கேட்டா அது என்னாத்தெச் சொல்லும்? இவுங்களுக்கெல்லாம் ஊரே கெடையாதுங்க. ம்ஹும், அப்பிடிச் சொல்றதுகூடத் தப்புதான். எல்லா ஊர்லெயும் தன்னோட ஊர் மாதிரியே இருப்பாங்க இவுங்கள்லாம். நானெல்லாம் பெரியவரோட எத்தனெ ஊருக்குப் போயிருக்கேன். ஒரு ஊர்லெயாவது ஒர்த்தர்ட்டெ நின்னோம், ஒரு எடத்துக்கு வளி கேட்டோம்னு கெடையாது. எல்லா ஊர்லெயும் எல்லாத் தெருவும் சந்தும் உள்ளங்கை ரேகெ மாதிரித் தெரியும் அவருக்கு, அந்தந்த ஊர்லெயே பெறந்து வளந்தவரு மாதிரி…”

இந்த உவமை, மேகத்திற்கு ஏது ஊர் என்னும் கருத்து, ஓஷோவின் பிரபலமான ஒரு கருத்துத்தான். அவருடைய 650 நூற்களில் ஒன்றின் பெயர் “My Way, The Way of White Clouds” என்பது. அதில் ஓரிடத்தில் அவர் சொல்கிறார், “வெண்மேகத்திற்குப் போகும் இடம் என்று ஏதுமில்லை. அது நகர்கிறது, எங்கும் நகர்கிறது. அனைத்து பரினாமங்களும் அதற்குச் சொந்தம், அனைத்து திசைகளும் அதற்குச் சொந்தம். எதுவும் நிராகரிக்கப் படுவதில்லை. அனைத்தும் முழுமையான ஏற்பில் இருக்கின்றன. எனவே நான் என பாதையை வெண்மேகங்களின் பாதை என்று அழைக்கிறேன்.” (A white cloud has nowhere to go. It moves, it moves everywhere. All dimensions belong to it, all directions belong to it. Nothing is rejected. Everything is, exists, in a total acceptance. Hence I call my way The Way of the White Clouds.)

மன்னாதியைப் பற்றி வருணிக்கும் வரிகளில் அவருடைய கண்களைப் பற்றிய குறிப்பு இது (பக்.451): “இவரிடம் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. புருவங்கள் இரண்டும் இமைகளுடன் ஏதோ மனத்தாங்கலில் இருப்பவைபோல அதிகபட்ச உயரத்தில் சென்று நிலைகொண்டு விட்டிருந்தன. கண்ணுக்குத் தெரியாத நிரந்தர ஆச்சரியம் ஒன்றை இடையறாது தரிசிக்கும் பாவம் கொண்ட கண்கள்.”

யுவன் வருணித்துள்ளது போன்ற புருவ-கண் இடைவெளியை நான் ஓஷோவிடம்தான் கண்டிருக்கிறேன். ஆனால் ஆச்சரியத்தை தரிசிக்கும் பாவம் அதில் எப்போதாவதுதான் இருக்கும்.

கதையில் வரும் இன்னொரு ஸ்வாரஸ்யமான, ஆழமான கருத்தைப் பாருங்கள். குருநாதரான ஸ்ரீவேதமூர்த்தி என்னும் பெரியவர் தன் சீடர்களுடன் ஒரு கோவிலில் இருந்தபோது கொரியாக்காரன் ஒருவன் அவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியை மன்னாதி, சந்தானத்திடம் விவரிக்கிறார் (பக்.320):
“…இறப்புக்குப் பின்னாலெ என்ன நடக்குது, இங்கேர்ந்து வெளியேறி எங்கே போறோம்’ங்குற மாதிரிக் கேட்டான். அதுக்கு இவரு என்ன சொன்னாருங்கிறீங்க?
சொல்லுங்க.
‘பிறக்குறதுக்கு முன்னாடி எங்கே இருந்தோமோ அங்கேதான்’னாரு. அவன் கொஞ்சநேரம் தரையைப் பாத்து யோசிச்சிக்கிட்டிருந்தான். இதுல இம்புட்டு யோசிக்கிறதுக்கு என்னா இருக்கு, சாதாரண தர்க்கம்தானே இதுன்னு நமக்குத் தோணுச்சு. அவன் தலை நிமிர்ந்து இவரைப் பாத்தான். இவரு கேக்குறாரு, ‘பிறந்து வர்றதெ உள்ளே வர்றதுன்னும், செத்த பின்னாடி வெளியேறுகிறோம்னும் நாங்க நினைக்கிறதுக்கு என்ன அடிப்படே இருக்கு?’
அந்தக் கேள்விக்கு ஒரு நிரந்தரத் தன்மை இருக்கிற மாதிரித் தோன்றியது. மன்னாதி பாமரனைப் போல் பேசுகிறார் என்றாலும் உள்ளுக்குள் வெகு சுதாரிப்பான ஒரு மனிதர் இருந்துகொண்டுதான் இருக்கிறார் என்பது அவர் தேர்வு செய்து சொல்லும் சம்பவங்களிலிருந்தும் அவருடைய ஞாபகத்தின் வழி பெருக்கெடுக்கும் சிந்தனா காரியங்களிலும் தெரியத்தான் செய்கிறது என்றும் பட்டது.
எங்களுக்கு இந்த பூமியும், இதுலே நடக்கிற சரீர வாழ்க்கையும்தான் நிஜம். ‘இங்கே, இப்போ’ங்கிறதுதான் உள்ளே இருக்கிறதுக்கான அடிப்படை விஸயம்’னு கற்பிதம் பண்ணிக்கிறோமால்லியா? இப்போ பஸ்ஸ்டாண்டுக்கு ஒரு பஸ் வருது. எதுக்கு வருது…?
மன்னாதி என் பதிலை எதிர்பார்த்து ஒரு இடைவெளி விட்டார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. மௌனமாக இருந்தேன். மன்னாதி தொடர்ந்தார்.
…ஸ்டாண்டுக்குள்ள நிக்கிறதுக்கா அதெச் செஞ்சு விட்டிருக்கான்? அது சும்மா ரெஸ்ட் எடுக்குறதுக்காக வருது. இல்லாட்டி தன்னோட உத்தியோகம் காரணமா ஜனங்களெ ஏத்திட்டுப் போறத்துக்காக வருது. மத்தபடி, அதோடெ படைப்பு நியாயம்ங்குறது ரோடுதான். ஓட்டம்தான். அதுக்குள்ளேருந்து வெளியேறித்தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ளே வருது. என்னா அமைதியா இருக்கீங்க, இந்த உதாரணம் நம்பளுதில்லே, எங்க பெரியவர் அந்தக் கொரியாக் காரர்ட்டெச் சொன்னதுதான்.
ம்.
‘ஆக, எறந்துபோறவுங்க வெளியேர்றதில்லே, உள்ளேதான் நொளையிறாங்க. விட்ட எடத்திலேர்ந்து கர்மத்தைத் தொடர்றதுக்காக’ங்குறது புரியுதான்னு கேட்டாரு. வந்த ஆளு வேகமாக் கேட்டான், ‘அந்தக் கர்மம்ங்குறதுதான் என்ன?’ இவரு நிதானமாச் சொன்னாரு, ‘அதெத்தானங்க நாம்ப தேடிக் கண்டுபிடிச்சாகணும்’. உத்தியோகத்தைக் கண்டுபிடிச்சிட்டா அது நடக்கிற ஸ்தலத்தையும் சுளுவாக் கண்டுபிடிச்சிறலாமே? கடேசியாச் சொன்னதை பெரியவர் சொல்லலே, நாம்ப சொல்றதுதான் இது.
மன்னாதி மறுபடி சிரிக்கத் தொடங்கினார்.”

“வெளியேற்றத்தின் உள்ளே” என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு வைத்ததற்கே மேலே உள்ள பத்தியில் அலசப்பட்டுள்ள கருத்துத்தான் காரணம் என்று சொல்லலாம். யுவனே தன் நாவலுக்கு வெளியேற்றம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறும் பலர் தங்களின் வாழ்விற்கான அர்த்தம் என்ன என்பதை உணர்த்தும் குருநாதரைக் கண்டுகொள்ளும் கதைதான் இது. குருவே தக்க நேரத்தில் வந்து அவர்களை ஆட்கொள்கிறார். ஆனால் மேலே சொன்ன பத்தியில் வெளியேற்றம் என்பது ஒட்டுமொத்த நிலையில் பேசப்படுகிறது. இதனை ஒரு கற்பனையான உரையாடல் மூலம் விளக்குகிறேன்.

’நாம இப்போ உள்ளே இருக்கிறோமா? வெளியே இருக்கிறோமா?’
’வீட்டுக்கு வெளியேத்தான் இருக்கிறோம்’
‘நீங்க சொல்ற விடை முழுமையானதில்லேங்குறத கவனிச்சீங்களா? ஒப்பீடான பதில் அது. வீட்டோட ஒப்பிடும்போது நாம அதுக்கு வெளியே இருக்கிறோம். ஆனால் உலகத்துக்கு உள்ளேதானே இருக்கிறோம்?’
‘ஆமாம்’
‘உலகத்துக்கு உள்ளேதான் இருக்கிறோம்னா அப்ப எதுக்கு வெளியே இருக்கிறோம்?’
‘அதான் வீட்டுக்கு வெளியேன்னு சொன்னேனே?’
’நாம உலகத்துக்கு உள்ளே இருக்கிறோம். வீடும் உலகத்துக்கு உள்ளே இருக்கு. உலகத்துக்கு உள்ளே இருக்கிற நாம உலகத்துக்கு உள்ளே இருக்கிற வீட்டுக்கு வெளியே இருக்க்றோம்னு சொல்றீங்க. இதையே வீடு நமக்கு வெளியே இருக்குன்னும் இப்ப சொல்லலாம். நான் கேக்குறது வேற. உலகத்துக்கு உள்ளே இருக்கிற இந்த வீடும் நாமளும் எதுக்கு வெளியே இருக்கிறோம்? அதாவது, இந்த உலகம் எதுக்கு, அதாவது எது ஒன்றுக்கு வெளியே இருக்கு?’

இந்த உரையாடலைப் பற்றி நீங்கள் கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள். நானும் என் நண்பன் அஸ்லமும் ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னால் அவன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து இந்தக் கருத்தை அலசிக்கொண்டிருந்தோம். அதற்குத் தூண்டுதலாக இருந்தது கவிக்கோ அப்துல் ரகுமான் இதே கருத்தை வைத்து எழுதியிருந்த ஒரு கவிதை. ‘இந்தப் பிரபஞ்சத்தை விட்டுச் செல்லும் நான் வெளியேறுகிறேனா இல்லை உள்ளே செல்கிறேனா?’ என்பதைப் போன்ற ஒரு வரியை மடக்கி மடக்கிப் புதுக்கவிதையாக எழுதியிருந்தார். அந்தக் கருத்து அப்போது எங்களைப் பெரிதும் கவர்ந்து சிந்திக்கத் தூண்டியது.

பின்னாளில் இதே போன்ற கருத்தை நான் மௌலானா ரூமியின் கவிதை ஒன்றில் கண்டேன்.
”பித்துநிலையின் விளிம்பில்
வாழ்ந்து வந்துள்ளேன் நான்,
காரணங்களைத் தேடியபடி,
கதவைத் தட்டியபடி.
அது திறக்கிறது.
ஓ, உள்ளுக்குள் இருந்தே தட்டியிருக்கிறேன்.”

(என் தமிழ் மொழிபெயர்ப்பை விட கோல்மன் பார்க்ஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது:
“I have lived on the lip
of insanity, wanting to know reasons,
knocking on a door. It opens.
I’ve been knocking from the inside!”)

இந்த நாவலின் இறுதியில் ஸ்ரீவேதமூர்த்தி என்னும் அந்த குருநாதர் நாள்-நேரம் குறித்து வைத்துக் காசியில் ஒரு குழியில் அமர்ந்து மூன்று முறை மூச்சை உள்ளே மட்டும் ஆழமாக இழுத்துக்கொண்டு அப்படியே படுத்து உயிரை விட்டு விடுகிறார். ‘துஞ்சுவது போலும் சாக்காடு’ என்கிறாரே வள்ளுவர். நமக்கோ தூக்கம்கூட அவ்வளவு இலகுவாக வருவதில்லை. அவரானால் படுத்து மரணித்துவிடுகிறார். அவ்வளவுதான்!
அவரின் சீடர்களைப் பல ஊர்களில் சந்தித்து அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டறிந்த சந்தானம், குருநாதர் சமாதி அடைவதைக் காசிக்குச் சென்று காண்கிறார்.

குருநாதரின் சீடர்களில் ஒருவரான ஜய்ராம் குருவின் இந்த முடிவு தவறென்று குறிப்பிடுகிறார். “உங்கள் பிறப்பை நீங்கள் நிர்ணயிக்க முடியும் என்றால் மட்டுமே உங்கள் மரணத்தையும் நீங்கள் நிர்ணயிக்க உரிமை உண்டு…” என்று அவர் சந்தானத்திடம் சொல்கிறார். ஒரு சீடன் தன் தனித்தன்மையில் இருந்து பேசும் குரலாக இது ஒலிக்கிறது.

ஆனாலும் ஸ்ரீவேதமூர்த்தி அத்தனை இலகுவாக ’உயிரை விடும்’ அல்லது ஸ்தூல உடலையும் உலகையும் விட்டு வெளியேறும் சம்பவம் மிக ஆச்சரியமாகவும் சிந்திக்கவேண்டியதாகவும் இருக்கிறது. இப்படிச் சொல்லி வைத்து மரணித்த சூஃபி குருமார்களின் சம்பவங்கள் பலவற்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன்.

சூஃபி ஞானி ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவம். அவர் தன் இளம் வயதில் பரம்பரைத் தொழிலான மருத்துவமே செய்து வந்தார். அவர்களின் குடும்பத்திற்கென்று ஒரு மருந்து கடை இருந்தது. அத்தார் என்றால் அத்தர் மற்றும் மருந்துகள் விற்பவர் என்று பொருள். அவர் ஒருநாள் கடையில் அமர்ந்திருக்கும் போது கம்பளி ஆடை அணிந்த ஒரு தர்வேஷ் (சூஃபிப் பக்கிரி) அவருடைய கடைக்கு முன்னால் வெகு நேரம் உலாத்திக் கொண்டிருந்தார். இந்தச் செயல் அத்தாருக்கு மிகவும் எரிச்சலூட்டியது. அவரை அழைத்து “உமக்கு என்ன வேண்டும்?” என்று கோபமாகக் கேட்டார். அந்த தர்வேஷ் சொன்னார், “எனக்கு உங்களிடம் எதுவும் வேண்டாம். உங்களுடைய அழகான கடையைப் பற்றி உங்களுக்குப் பெருமிதம் இருப்பதாகத் தெரிகிறது. இறைவனைச் சந்திக்கும் நேரம் வந்தால் இதை அப்படியே விட்டுவிட்டு உங்களால் என்னைப் போல் கிளம்ப முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.” இவ்வாறு சொல்லிவிட்டு அந்த தர்வேஷ் தன்னுடைய கம்பளி ஆடையைப் போர்த்திக்கொண்டு உடலை நீட்டித் தரையில் படுத்துவிட்டார். அவர் ஏதோ விளையாடுகிறார் என்றுதான் அத்தார் முதலில் நினைத்தார். பத்து நிமிடங்களாகியும் அவர் அசைவில்லாமல் கிடப்பதைக் கண்டு சந்தேகப்பட்டுக் கடையிலிருந்து கீழே இறங்கி வந்து அவரைத் தொட்டுப்பார்த்தார். அவருடைய உடல் சில்லிட்டுக் கிடந்தது. தூங்குவது போல் அத்தனை இலகுவாக அவர் இறப்படைந்தது அத்தாருக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. உடனே தன்னுடைய கடையை இழுத்து மூடிவிட்டு தனக்கு வழிகாட்டக் கூடிய சூஃபி ஞானகுரு ஒருவரைத் தேடிக் கிளம்பிவிட்டார்!

6 comments:

  1. //எதைப் பாத்து நீ ஆச்சரியப்படுறியோ, அதெ அடையுற தகுதி எனக்கு இல்லேன்னு ஒம்மனசு பேசுறதா அர்த்தம்.’//அழகான வரிகள்.அற்புதங்கள் செய்கிறவனுக்கு அது அற்புதமே இல்லை.இயல்பான செயலாகத்தான் இருக்கணும்.

    ReplyDelete
  2. ஒரு புத்தக மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் எடுப்பது போன்று உள்ளது.

    உள்ளே, வெளியே என்று குழந்தைகள் ஒரு விளையாட்டு விளையாடும். வாழ்வும் அது போன்ற உள், வெளி விளையாட்டுத்தான்.

    "போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே" என்பது சிவபுராணம்.

    நற்சிந்தனை அளித்ததற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. For your reading pleasure:
    http://ia600808.us.archive.org/13/items/Quran-TheLinguisticMiracleBook150Pages-Linguisticmiracle.com/Quran-the_Linguistic_Miracle-LinguisticMiracle.pdf

    ReplyDelete
  4. எங்க ஹஜ்ரத் (மௌலவி ஹஜ்ரத் வஹ்ஹாப் சாப் அவங்க தான்) அவங்க வீட்டில் நான் படுக்கும் காலம் ஒன்று இருந்தது.
    அப்போது விடிய விடிய விழித்துக் கொண்டிருப்பார்கள்.
    யாரும் இருக்க மாட்டார்கள்.
    எனக்கு தூக்கம் வந்து நான் தூங்க போய் விடுவேன்.
    அவர்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து பத்து பதினைந்து அடி தள்ளி போய் நான் பாய் விரித்து படுத்து தூங்கி விடுவேன்.
    சிறிது நேரத்தில் என்னை தட்டி எழுப்புவார்கள்.
    நான் சட்டென்று விழித்து பார்ப்பேன்.
    தூரத்தில் அமர்ந்து இருப்பார்கள்.
    .........
    முதலில் இது போன்ற சம்பவங்களை அவர்கள் வீட்டில் காணும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. போக போக ஆச்சர்யம் ஹராம் என்பதும் அவர்கள் தூரத்தில் அமர்ந்த படியே என்னை தட்டி எழுப்பியது ஒரு மிகச் சாதாரண விஷயம் என்பதையும் அனுபவத்திலேயே புரிய வைத்தார்கள்.
    ----------------

    ReplyDelete
  5. Sean Stone, the son of famed Hollywood director Oliver Stone converted and embraced Shia Islam

    http://www.guardian.co.uk/world/shortcuts/2012/feb/15/sean-stone-muslim-religion-hollywood

    ReplyDelete