Tuesday, July 29, 2014

ரகசியம்


உன் ஒளி                      
இசையாகி நுழைந்தது
என்னுள்

கண்ணீரில் நீராடிய
இதயத்தைக்
காதலால் தழுவினாய்

உனக்காக
உலகத்தை
உதறித் தள்ளினார்கள்
உன் பக்தர்கள்

என் இதயத்தின் விழியோ
உலகெங்கிலும்
உன்னையே காண்கிறது

உன் ஒளியில்
ஒவ்வொரு துகளும்
கண்ணாடி ஆகிவிடவில்லையா?

உன் அழகை
தரிசித்த வெறியில்
என்னுள் மூளும்
அரிதாரங்களை அழிக்கும்
கலகம்

நினக்கு
பிம்பங்கள் இருக்கலாகாதென்று
கற்களைத் தேடியலையுமொரு
கண்ணாடியோ நான்?

வெளியே தேடிய கிளைகள்
சட்டென்று கண்டுகொண்டன
ஒவ்வொரு பூவிலும்
வேரின் (சு)வாசம்

வண்ணங்களில் மறைந்திருக்கும்
ஓவியன் நீ
திரையை விலக்கிய
ஓவியம் நான்

சொல்ல முடியாதவன் நீ
சொல்லி முடியாதவன் நான்

உரை
உன் திரை
இசை உன்
இரவு உடை

என் உடல்
என் உள்ளம்
என் உயிர்
என் ரகசியம்
எல்லாம்
உன் ரகசியம்

காதலில் உயிர்
கரையும்போதெல்லாம்
உள்ளம் வாசிக்கும்
உடலில் உன் ரகசியம்

1 comment:

  1. அருமை.... மிகவும் அருமை.....

    ReplyDelete