இறைவனின் படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் தனித்தன்மை ஆனவன். படைப்புக்களின் உச்சம் அவன். இறைவனுக்கும் ஏனைய படைப்புக்களுக்கும் நடுவில் அவன் இருக்கிறான். ”மனிதன் ஒரு பாலம்” என்று சொல்லப்படுவது உண்டு. இறைவனின் திருப்தியை அடையும்படி அவன் வாழ்வதற்கே தீன் என்னும் வாழ்க்கை நெறியை இறைவன் தன் தூதர்களின் வழியாக மனித இனத்துக்கு அருளியுள்ளான். அதில்தான் மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் நிம்மதியும் அமைதியும் இருக்கிறது என்பதால் அதற்கு “தீனுல் இஸ்லாம்” என்று பெயர் உள்ளது.
தீன் என்பதை ஆங்கிலத்தில்
religion என்று சொல்கிறார்கள். தமிழில் சமயம், மதம், மார்க்கம் என்றெல்லாம் சொல்கிறோம்.
மார்க்கம், நெறி ஆகிய சொற்கள் ’பாதை’ என்று பொருட்படும். தீனுல் இஸ்லாம் நேர்வழியாக,
இறைவனை அடைவதற்கான பாதையாக உருவகிக்கப்படுகிறது:
“எம்மை நேர்வழியில் நடத்துவாயாக” (அல்-குர்’ஆன் 1:5)
இப்பாதை, “இறைவனால் அருள்
செய்யப்பட்டோர்” நடந்த பாதை என்று திருமறையின் அடுத்த வசனம் சொல்கிறது (ஸிராத்தல்லதீன அன்’அம்த அலைஹிம் – 1:6)
இறைவனால் அருள் செய்யப்பட்டோர்
நான்கு வகையினர் என்றும் குர்’ஆன் சொல்கிறது: ”எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும்
கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த இறைத்தூதர்கள், சத்தியவான்கள்,
உயிர்த் தியாகியர், மற்றும் நல்லடியார்கள் ஆகியோருடன் இருப்பர். இவர்கள்தாம் மிக அழகிய
தோழர்கள்” (வ மன்ய் யுதி’இல்லாஹ வர்-ரசூல ஃப’உலாஇக்க
ம’அல்லதீன அன்’அமல்லாஹு அலைஹிம் மினந் நபிய்யீன வஸ்-ஸித்தீக்கீன வஷ்-ஷுஹதாஇ வஸ்-ஸாலிஹீன்;
வ ஹசுன உலா’இக்க ரஃபீக்கா – 4:69)
இந்த படித்தரங்களில்
உள்ளோர் நடந்த ”நேர்வழி” என்பது ஸ்தூலமான பாதை அல்ல. அது இதயம் நடக்கும் பாதையாகும்.
எனவே நடப்போரின் தன்மைக்கு ஏற்ப இதில் பல அம்சங்கள் உள்ளன.
ஸூஃபிகள் இதனை
ஷரீஅத், தரீக்கத், ஹகீக்கத், மஃரிஃபத், மற்றும் வஹ்தத் ஆகிய ஐந்து பாதைகளாகச் சொல்லியுள்ளனர்.
இவை ஐந்தும் ஒரே பாதையின் ஐந்து அம்சங்கள் ஆகும். இவற்றுக்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்வதே
இவற்றில் நடப்பதாகும். இவை ஐந்தும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தவை அல்ல. நடப்பவனின்
கவனத்திற்குத் தக புலப்படுபவை ஆகும். “இறைவனை அடைய நாடுபவர் ஏக காலத்தில் இந்த ஐந்து
பாதைகளிலும் நடக்க வேண்டும்” என்று ஸூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரீ (ரஹ்) சொல்லியுள்ளார்கள்.
இந்த நேர்வழி
நடப்பதையே நக்ஷ்பந்திய்யா நெறியில் “நழர் பர்
கதம்” என்னும் கோட்பாடாகச் சொல்லியுள்ளனர்.
கதம் என்பதன் நேரடிப் பொருள்
‘பாதம்’ என்பதாகும். எனவே, ‘நழர் பர் கதம்’ என்பதன் நேரடி அர்த்தம் “பாதத்தில் பார்வை
வைத்தல்” அல்லது “காலடியைக் கண்காணித்தல்” என்பதாகும்.
கதம் என்பதன்
குறிப்புப் பொருள் நடவடிக்கை, செயல்கள் என்பதாகும். உதாரணமாக, ஆங்கிலத்தில் steps என்னும்
சொல் நடக்கும்போது எடுத்து வைக்கும் காலடிகளைக் குறிக்கும். எனினும், “to take
necessary steps” என்றால் தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் என்று பொருட்படும். “my
steps are measured” என்றால் என் நடவடிக்கைகள் எச்சரிக்கையுடன் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன
என்று பொருளாகும்.
ஸூஃபி நெறியில்
இந்தக் கோட்பாடு நேரடியான பொருளிலும் குறிப்புப் பொருளிலும் செயல்படுத்தப் படுகிறது.
இரண்டிற்கும் உரிய பங்களிப்பு இருக்கிறது. இரண்டையும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
நழர் பர் கதம் – நேரடிப் பொருளில்
முதலில், நழர்
பர் கதம் என்பதை நேரடிப் பொருளில் எடுத்துக் கொண்டு அதற்கான ஸூஃபித்துவ விளக்கங்களைக்
காண்போம்.
ஆன்மிகத்தில்
ஈடுபடும் சாதகனிடம் உண்டாக வேண்டிய முதல் மாற்றம் “தஸ்க்கியத்துந் நஃப்ஸ்” (உளத்தூய்மை,
அகத்தூய்மை) என்பதாகும். மனம் என்பதை ஒரு கலம் (பாத்திரம், vessel) என்று உருவகம் செய்து
கொள்ளுங்கள். பாத்திரம் சுத்தமாக இருந்தால்தான் அதில் பாலை ஊற்ற முடியும். அழுக்கான
கலத்தில் தூய பாலை ஊற்றினால் பால் கெட்டுவிடும். அதுபோல், அழுக்கான மனத்தில் இறை ஞானத்தைப்
புகட்டினால் அந்த ஞானம் திரிந்துபோய் வழிகேடு ஆகிவிடும். எனவே மனத்தைத் தூய்மை செய்தலே
ஸூஃபிப் பயிற்சிகளின் முதல் நிலையாக உள்ளது.
முன்பு நாம் கண்ட முதல் கோட்பாடான
“ஹோஷ் தர் தம்” (மூச்சில் விழிப்புடன் இருத்தல்) என்பதில் மூச்சுக்கும் மனத்துக்கும்
இடையே உள்ள தொடர்பைப் பார்த்தோம். மூச்சை ஒழுங்குபடுத்தினாலே மனம் ஒரு கட்டுப்பாட்டுக்கு
வந்துவிடும். அது ஒரு பாத்திரத்தை ஆட்டாமல் அசைக்காமல் நிலையாகப் பிடித்து வைப்பதைப்
போன்றதாகும். அப்போதுதான் பால் ஊற்றும்போது சிந்தாது, கொட்டாது.
ஆனால், பாத்திரம் அசைவு ஆட்டம்
இல்லாமல் ஸ்திரமாக பிடிக்கப்பட்டால் மட்டும் போதாது, அது அழுக்கில்லாமல் சுத்தமாகவும்
இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் ஊற்றப்படும் பால் கெடாது.
மனம் செம்மை ஆவதற்கு ஸ்திரம்
மற்றும் தூய்மை இரண்டுமே வேண்டும். மனம் தூய்மை ஆவதற்கான பயிற்சியாக முதல் கோட்பாட்டுடன்
இந்த இரண்டாம் கோட்பாடான “நழர் பர் கதம்” என்பதும் சேர்க்கப்படுகிறது.
மனம் என்பது ஐந்து புலன்களின்
வழியாகச் செயற்படுகிறது. அவை ஸ்பரிசம் (தொடுவுணர்ச்சி), சுவைத்தல், முகர்தல், பார்த்தல்,
மற்றும் கேட்டல். இந்த ஐம்புலனும் நிகழ ஐம்பொறிகள் கருவிகளாக உள்ளன. அவை உடல், நாக்கு,
மூக்கு, கண், மற்றும் காது. இந்த ஐந்து பொறிகளின் வழியாகவே உலகத்திலிருந்து மனத்திற்கு
உள்ளீடுகள் வருகின்றன.
ஐம்புலன்களில் பார்வை என்பதே
மிகவும் ஆற்றலுள்ளதாக இருக்கிறது. அதன் வழியாக மனத்தில் தொடர்ந்து பிம்பங்கள், உருவங்கள்
பதிவாகின்றன. மனம் சதா அந்த உருவங்களைச் சலித்துக் கொண்டே இருக்கிறது. பார்வை உலகைத்
துழாவிக் கொண்டே இருந்தால் ஆகுமான காட்சிகள் மட்டுமல்லாது ஆகாத, தகாத காட்சிகளும் அதில்
பதிவாகின்றன. அதன் காரணமாக மனம் கெட்டுப் போகிறது. தீமையைத் தூண்டும் மனமாக – நஃப்ஸுன் அம்மாரத்துன் பிஸ்-ஸூஇ – ஆகிவிடுகிறது.
இதைக் கட்டுப்படுத்த ஒரு
வழி இருக்கிறது. கண்கள் தேவையான விடயங்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது. அப்படிப்
பார்வையைக் கட்டுப்படுத்த வேண்டும். எனவே ஒருவர் தன் பார்வையைத் தன் பாதத்தில் வைத்தவராக
இருக்க வேண்டும் என்று ஸூஃபி மகான்கள் வலியுறுத்துகின்றனர்.
“(நபியே!) விசுவாசிகளிடம் கூறுவீராக,
அவர்கள் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளட்டும்.
(24:30)
என்னும் திருவசனத்தின்படி இந்தப் பயிற்சி இறைக்கட்டளையாக உள்ளது.
பார்வையைத் தாழ்த்தாமல்,
கட்டுப்படுத்தாமல் அதனை எல்லாத் திசைகளிலும் அவிழ்த்துவிடுவது என்பது ஹராமான – இறைவனால்
தடுக்கப்பட்ட – தகாத காட்சிகளைக் காணவும் அதன் பிம்பங்கள் மனத்தை அழுக்காக்கவும் வழியாகிவிடும்.
நபி (ஸல்) சொன்னார்கள்:
“அலீயே! (அந்நியப் பெண் மீது) ஒரு பார்வையை இன்னொரு பார்வையால் தொடர வேண்டாம். நிச்சயமாக,
முதலாவது உன்னுடையது, இரண்டாவது உன்னுடையதல்ல (யா
அலிய்யு! லா துத்பி’இந்-நழ்ரத்தந்-நழ்ரத்த ஃப’இன்ன லகல் ஊலா வ லைச லகல் ஆஃகிரா).”
(அறிவிப்பாளர்: புரைதா (ரலி); நூல்: சுனன்
திர்மிதி #2777).
அதாவது, எதார்த்தமாக அனிச்சையாக
படுகின்ற முதல் பார்வை மன்னிக்கப் பட்டுவிடுகிறது. தெரிந்த பின்னரும் திருப்பிக் கொள்ளாமல்
தொடர்ந்து பார்க்கும் பார்வை ஷைத்தானுடையது ஆகிறது. அப்போது நழர் (பார்வை) ஷைத்தானைப்
பின் தொடர்வதாகி விடுகிறது.
எனவே ஜஹ்வர் அலீ நக்ஷ்பந்தி
அல்-ஹசனீ அல்-ரப்பானீ சொல்கிறார்: “இன்றைய காலத்தில் இணையம், சமூக வலைத்தளம் போன்றவை
நட்புப் பட்டியலில் பெண்கள் பலரைக் கொண்டு வந்துவிடுகிறது. அவர்கள் ஆபாசமான படங்களைக்கூட
அதில் பதிவேற்றி விடுகின்றனர். அல்லது, ஹிஜாப் (முகத்திரை) இல்லாமல், இஸ்லாமிய கண்ணியம்
இல்லாமல் படங்கள் போடுகின்றனர். அவற்றை நீங்கள் நீக்கி விடுங்கள். அல்லது, அத்தகையோரின்
தொடர்பைத் துண்டித்து விடுங்கள். எனவே, இன்றைய காலத்தில் நழர் பர் கதம் – காலடியை கவனித்தல்
என்னும் சொற்றொடருக்கு விரிவான கண்ணோட்டம் உள்ளது. நீங்கள் கஸ்டமர் கேருக்கு அழைத்துப்
பேசும்போது தொலைபேசியில் ஒரு பெண் பேசக்கூடும், அல்லது விமானத்தில் ஏர்ஹோஸ்டஸ் அல்லது
வியாபாரத்தில் ஒரு பெண் முகவர் உங்களை அணுகிப் பேசுகிறார். அத்தகைய நிலையில், உன் பார்வையை
உன் உள்ளத்தின் பாதத்தில் வை! இதன் பொருள் நீங்கள் எல்லோரிடமும் கடுகடுப்பாக இருக்க
வேண்டும் என்பதில்லை. அனைவரிடமும் கனிவாகவும் பரிவாகவும் இருங்கள். அது வேறு.”
24-11-2002 ஞாயிற்றுக் கிழமை
இரவு ரமலான் 19-ஆம் பிறையில் தராவீஹ் தொழுகைக்குப் பின்னர் நான் என் குருநாதர் சய்யிதுனா
பிலாலி ஷாஹ் ஜுஹூரி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்களின் திருக்கரங்களில் பைஅத் செய்து அன்னாரின்
சீடன் ஆனேன். அன்று அவர்கள் முரீதீன்களுக்கு ஆற்றிய உரையில் மேற்குறிப்பிட்ட ஹதீஸை
மேற்கோள் காட்டிப் பேசினார்கள் என்பது பசுமையாக நினைவில் உள்ளது. அந்த ஹதீஸின் மீது
இப்படி ஒரு விளக்கத்தையும் சொன்னார்கள்: “முதல் பார்வை உன்னுடையது. இரண்டாம் பார்வை
ஷைத்தானுடையது. ஆனால், முதல் பார்வை அனிச்சையாக விழுந்ததும் அந்நியப் பெண்ணை விட்டும்
நீ சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டால் அந்தப் பார்வை யாருடையது? நீ யார் சொன்னதைப்
பின்பற்றி உன் பார்வையை விலக்கினாய்? நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் பின்பற்றித்தானே
விலக்கினாய்? எனவே அப்போது உன் பார்வை நபியில் ஃபனா ஆகிவிட்டது. அது நபி (ஸல்) அவர்களின்
பார்வை ஆகும்! அதற்கான நற்கூலியை அல்லாஹ் உனக்கு அளிப்பான்.”
மேலும் என், குருநாதர் சொல்கிறார்கள்:
“நீ ஒரு கடை வைத்திருக்கிறாய் என்றால் அங்கே பெண்களும் பொருள் வாங்க வருவார்கள். அவர்களிடம்
முகத்தைத் திருப்பிக் கொண்டு வியாபாரம் செய்ய முடியாது. அப்படி நிர்ப்பந்தமாக அவசியம்
கருதி அந்நியப் பெண்ணைப் பார்க்க வேண்டி இருந்தால் என்ன செய்வாய்? உன்னை விட மிகவும்
வயதில் மூத்தவராக இருந்தால் உன் அம்மாவாகப் பார், சற்று மூத்தவர் என்றால் உன் அக்காவாகப்
பார், உன்னை விட இளைய பெண் என்றால் உன் தங்கையாகப் பார், மிகவும் இளைய பெண் என்றால்
உன் மகளாகப் பார். இவர்களை நீ இச்சையோடு பார்க்க மாட்டாய் அல்லவா? அப்படிப் பார். இச்சையோடு
மனைவியாகப் பார்க்காதே.”
”நழர் பர் கதம்” என்னும்
பயிற்சிக்கு வெளிப்படையான அர்த்தத்தின்படி இன்னொரு விளக்கத்தையும் காண்போம். அது பின்வரும்
ஹதீஸ்படி நபிவழியாகவும் இருக்கிறது:
[சய்யிதுனா அல்-ஹசன்
இப்னு அலீ (ரலி) அவர்கள் தன் தாய்மாமன் (ஃகால்) ஆன ஹிந்திப்னு அபீ ஹாலா (ரலி) அவர்களிடம்
நபி (ஸல்) அவர்களின் வருணிப்பை (ஹில்யா) வினவியபோது அவர் சொன்ன விரிவான வருணிப்பிலிருந்து
ஒரு பகுதி]: ”நபி (ஸல்) நடக்கும்போது மலையில் இருந்து இறங்குவது மாதிரி நடப்பாரகள்.
அவர்கள் கண்ணியமான முறையிலும் இலகுவாகவும் நடப்பார்கள். அவர்கள் துரிதமாக நடப்பார்கள்.
அவர்கள் நடக்கும்போது சரிவில் இறங்குவது போல் இருக்கும். அவர்கள் எவரிடமேனும் பேசுவது
என்றால் தன் முழு உடலாலும் அவரின் பக்கம் திரும்பி நின்று பேசுவார்கள். நபி (ஸல்) தன்
பார்வையைத் தாழ்த்தி இருப்பார்கள். மேலே பார்ப்பதைவிட அதிகமாகக் கீழே பார்ப்பார்கள்.
நபி (ஸல்) தன் பார்வையைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். தன் தோழர்களிடம் முதலில் அவர்களே
பேசுவார்கள். தான் சந்திக்கும் எவருக்கும் முந்தி சலாம் சொல்வார்கள்.” (காழி இயாள்
(ரஹ்) அவர்களின் அஷ்-ஷிஃபா, அத்தியாயம்: 2: பகுதி: 25).
மேட்டில் இருந்து
கீழே இறங்குபவர் பார்வையைத் தன் பாதத்தில்தான் வைத்திருப்பார். அவர் மேலே பார்த்தபடி
இறங்க மாட்டார், கீழேதான் பார்ப்பார். எனவே, நபி (ஸல்) அவர்களின் நடையைப் பின்பற்ற
’நழர் பர் கதம்’ என்னும் பயிற்சி வழி செய்கிறது. அப்படி நடப்பது பணிவின் அடையாளமாக
இருப்பதையும் மகான்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
”அருளாளனின் அடியார்கள் – அவர்கள்தாம்
பூமியில் பணிவுடன் நடப்பார்கள்” (25:63)
என்றும்,
“பூமியில் கர்வமாக நடக்காதீர்” (17:37)
என்றும் இறைவன் கட்டளையிடுவதற்கு ஏற்ப நல்லடியார்களான ஆன்மிக சாதகர்கள்
நடப்பதற்கும் இந்த “நழர் பர் கதம்” என்னும் பயிற்சி வழி கோலுகிறது.
நழர் பர் கதம் – குறிப்புப்
பொருளில்
காலடியை கவனித்தல்
என்பது அதன் நேரடியான வெளிப்படையான பொருளில் கருதப்படும்போது சாதகன் தன் பார்வையை அலையவிடாமல்,
தகாத காட்சிகளில் படவிடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதைக் கண்டோம். அதே சமயம்,
ஒருவர் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பார்க்கவே கூடாது என்பது அதன் அர்த்தமன்று. அப்படி
ஒருவர் புற உலகத்தைப் பார்க்கமாலேயே இருப்பதும் குர்’ஆனுக்கு மாற்றம் ஆகும். ஏனெனில்
நம்மைச் சுற்றியுள்ள இறை அத்தாட்சிகளை நோக்கும்படி அல்லாஹ் ஆணை இடுகிறான் என்பதை ஜஹ்வர்
அலீ நக்ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ சுட்டிக் காட்டுகிறார். ஓர் உதாரணம்:
அவனே விண்ணிலிருந்து
மழையை இறக்கினான்.
அதனைக் கொண்டு
யாம்
அனைத்து வகை தாவரங்களையும் வெளியாக்கினோம்,
அதிலிருந்து பசுமைகளை வெளிப்படுத்தினோம்,
அதிலிருந்து அடர்த்தியான கதிர்களாக வித்துக்களை வெளியாக்கினோம்.
பேரீச்சம் மரப் பாளையில் இருந்து
வளைந்து தொங்கும் பழக்குலைகளும் உள்ளன;
திராட்சைத் தோட்டங்களையும்,
ஒன்று போலவும் வெவ்வேறாகவும் உள்ள
மாதுளை, ஆலிவ் ஆகியவற்றையும் (வெளிப்படுத்தினோம்).
அவை காய்ப்பதையும் பின்பு கனிந்து பழமாவதையும்
நீவிர் உற்று நோக்குவீராக!
இறைநம்பிக்கை கொள்வோருக்கு
நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் உள்ளன.
(குர்’ஆன் 6:99)
இவ்வாறு வானங்களையும்
பூமியையும் உற்று நோக்கி இறை அத்தாட்சிகளை விளங்கும்படி இறைவன் ஆர்வமூட்டுகிறான். அதை
எல்லாம் நாம் பார்க்கத்தான் வேண்டும். எனவே, நழர்
பர் கதம் என்பது குறியீட்டு ரீதியில் உட்பொருள் காண வேண்டிய ஒரு கோட்பாடு என்றும்
கருத இடம் உண்டாகிறது.
நக்ஷ்பந்திய்யா தரீக்காவின் முதல்வரான ஃகாஜா பஹாவுத்தீன் ஷாஹ் நக்ஷ்பந்த்
(ரஹ்) சொல்கிறார்கள்: “கதம் அல்லது காலடிகள் என்பது நாட்டம் (இராதத்) என்பதைக் குறிக்கும்.
நமது நாட்டம் நம் ஷைஃகின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும். அடுத்து அது நபி (ஸல்) அவர்களின்
நாட்டத்துடன் பொருந்த வேண்டும். அடுத்து அது இறைவனின் நாட்டத்துடன் பொருந்த வேண்டும்.
ஏனெனில் அல்லாஹ் சொல்கிறான்:
’இறை விசுவாசிகளே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்,
இறைத்தூதருக்கு
அடிபணியுங்கள், மேலும் உங்களில் இருந்து
அதிகாரமுள்ளோருக்கு அடிபணியுங்கள்.’ (4:59)”
இமாமுர் ரப்பானீ அஹ்மத் அல்-ஃபாரூக்கி (ரஹ்) அவர்கள் தனது ’மக்தூபாத்’
என்னும் கடிதத் தொகுப்பின் 295-ஆம் கடிதத்தில் இப்பயிற்சியின் அகமியம் குறித்துப் பின்வருமாறு
விளக்குகிறார்கள்:
”பார்வை காலடியை
முந்துகிறது. காலடி பார்வையைத் தொடர்கிறது. மேலான படித்தரத்திற்கு உயர்வது முதலில்
பார்வையாலும் அடுத்துக் காலடியாலும் ஆகும். பார்வை உயர்ந்து சென்ற இடத்தைக் காலடி அடைந்தவுடன்
பார்வை அதனினும் மேலான படித்தரத்திற்கு உயர்த்தப்படுகிறது. காலடி அதனை மீண்டும் பின்
தொடர்கிறது. அப்படியாக பார்வை செம்மை நிலையை நோக்கி உயர்ந்து அந்த நிலைக்குக் காலடியை
இழுக்கிறது. நாம் சொல்கிறோம், ‘பார்வையைக் காலடி தொடரும்போது நபி (ஸல்) அவர்களின் காலடியை
அணுக ஆயத்தம் ஆகும் நிலையை முரீது எட்டிவிட்டான். எனவே, நபி (ஸல்) அவர்களின் காலடிகளே
அனைத்துக் காலடிகளுக்கும் மூலம் என்று சொல்லப்படுகிறது.’”
இறைவனுக்கும் அவன் திருத்தூதருக்கும் அதிகாரிகளுக்கும்
நாம் அடிபணிய வேண்டும் என்று குர்’ஆன் சொல்கிறது. இங்கே ஆன்மிக ரீதியாக அதிகாரம் உள்ளோரை
இவ்வசனம் குறிப்பதாகக் கொள்வது இவ்வுலக ஆட்சியில் அதிகாரம் உள்ளவர்களையும், உறவு ரீதியாக
அதிகாரம் உள்ள பெற்றோர்கள் மற்றும் வயதில் மூத்தவர்கள் ஆகியோரைக் குறிக்கும் என்று
கொள்வதை விட அதிகம் பொருத்தமானது ஆகும். அதே சமயம் ஷைத்தான், ஹவா (நஃப்ஸின் இச்சை)
ஆகியவற்றைப் பின்பற்றக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. பின்வரும் திருவசனங்கள் இதனைத்
தெளிவாக்கும்:
“இறை விசுவாசிகளே! ஷைத்தானின் காலடிகளைப் பின்பற்றாதீர்” (24:21)
”இறை விசுவாசிகளே! நீவிர் இஸ்லாமில் முழுமையாக நுழைந்துவிடுவீராக!
ஷைத்தானின்
அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர். நிச்சயமாக,
அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.” (2:208)
“(நபியே!) தன் இச்சையை தெய்வமாக எடுத்துக்கொண்டோனை நீவிர் பார்த்தீரா? அறிவுடனேயே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டுவிட்டான்;
மேலும்,
அவனின் செவியின் மீதும் இதயத்தின் மீதும் முத்திரை இட்டுவிட்டான்;
மேலும்,
அவனின் பார்வை மீது திரையிட்டுவிட்டான்;
எனவே, அல்லாஹ்வுக்குப்
பிறகு அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாவன்?
நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?” (45:23)
நாம் யாரைப் பின்பற்ற
வேண்டும், யாரைப் பின்பற்றக் கூடாது என்று மேற்காணும் திருவசனங்கள் தெளிவாக்குகின்றன.
இவற்றின் வெளிச்சத்தில் நழர் பர் கதம் என்னும்
கோட்பாட்டை ஜவ்ஹர் அலீ நக்ஷ்பந்தி அல்-ஹசனீ அல்-ரப்பானீ இவ்வாறு விளக்குகிறார்:
”நக்ஷ்பந்திய்யா
நெறியில் காலடியைக் கவனித்தல் என்பது ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதையும் எல்லா நேரங்களிலும்
அதை நேராகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதையும் குறிக்கும். உன் காலடிகளையும் அசைவுகளையும்
நீ கவனிக்கவில்லை என்றால் நீ ஷைத்தானைப் பின் தொடர்கிறாய் என்பதற்கான சாத்தியம் உண்டு!
எனவே நழர் பர் கதம் என்பது அல்லாஹ்வின் சட்ட எல்லைகளுக்குள் ஒருவர் தன்னைப் பாதுகாத்துக்
கொள்வதைக் குறிக்கும்.”
இஸ்லாமை ஏற்று
அதில் நக்ஷ்பந்திய்யா ஞான நெறியிலும் தன்னை இணைத்துக் கொண்டவரான ரென்ஸ் நூனிஸ் என்பார்
நழர் பர் கதம் என்பதற்கு மூன்று விதமான வியாக்கியானங்கள் உள்ளன என்று சுட்டுகிறார்:
”சாதகன் தன் இறைவனைத்
தவிர வேறு எதையும் முன்னோக்காமல் இருப்பது பயபக்தியின் அடையாளம் ஆகும். ஓர் இலக்கை
அடைய நினைப்பவரைப் போல் அல்லாஹ்வின் தெய்வீக பிரசன்னத்தைத் தேடுபவரும் அதனை நோக்கி
விரைந்து செல்கிறார்,
”நம் காலடியை
கவனித்தல் என்பது சூழ்நிலைகளை கவனிப்பதையும் குறிக்கும். அதாவது செயல்படுவதற்கும் சும்மா
இருப்பதற்குமான சூழ்நிலைகளை உணர்தல். எப்போது செயல்பட வேண்டும், எப்போது நிறுத்த வேண்டும்
என்று தெரிவது. நழர் பர் கதம் என்பது ஒருவரின் இயற்கையான சுபாவத்தில் (ஃபித்ரத்) பொதிந்துள்ள
ஞானம் என்றும் அதனை அவர் கண்டடைவதே நழர் பர்
கதம் ஆகும் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஷைஃகு ஃபக்ருத்தீன் அலீ இப்னு ஹுசைன் அஸ்-ஸஃபீ
வாஇழ் காஷிஃபி (கத்தஸல்லாஹு சிர்ரஹு) அவர்கள் சொல்கிறார்கள்: ’நழர் பர் கதம் என்பது
உள்ளமையின் படித்தரங்களில் கடந்து போகின்றவரும் சுயேச்சையைத் துறப்பவரும் ஆன சாதகருக்கு
உரியதாகும்.’
”இந்த மூன்று
வியாக்கியானங்களில் முதலாவது ஆரம்ப நிலையில் உள்ள சாதகர்களையும், இரண்டாவது நடுவழியில்
உள்ளோரையும், மூன்றாவது இலக்கை அடைந்தோரையும் குறிக்கும் என்று கருதலாம்.”
நழர் பர் கதம் என்பதற்கு உட்பொருள் நோக்கில் இப்படிப் பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை இறைஞானியர் ஒவ்வொருவருக்கும் இறைவன் திறந்து தந்த உள்ளுதிப்பான விளக்கங்கள் ஆகும். முத்தாய்ப்பாக, நூருல் மஷாஇஃக் (குருமார்களின் பேரொளி) என்று போற்றப்படும் சய்யிதுனா நூரீ ஷாஹ் அல்-ஹசனி வல்-ஹுசைனி (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அறபியில் காஃப்-தால்-மீம் ஆகிய மூன்று எழுத்துக்களை ஒரு சொல்லாக ஒலிக்குறியீடுகள் இன்றி எழுதும்போது அதனை கதம் என்றும் வாசிக்கலாம், கிதம் என்றும் வாசிக்கலாம்.
இதனை ‘கதம்’ என்று வாசித்தால் பாதம் என்று பொருட்படும். கிதம் என்று வாசித்தால் “பூர்வீகம்” என்று பொருட்படும். பூர்வீகம் என்பது தனக்கொரு ஆரம்பம் இல்லாத ஆதி (அவ்வல் பிலா இப்திதாஃ’) ஆகும். அது இறைவனைக் குறிக்கும். படைப்புக்களின் சுயங்கள் (ஜாத்) புதுமையானவை (ஹாதிஸ்) ஆகும், மேலும் சுய உள்ளமை அற்றவை (அதம்) ஆகும். இறைவனின் சுயம் (ஜாத்) பூர்வீகமானது (கிதம்) ஆகும்.
எனவே, நழர் பர் கதம் எனறால் ”காலடியை கவனித்தல்”
என்பதாகும். சய்யிதுனா நூரீ ஷாஹ் அல்-ஹசனி வல்-ஹுசைனி (ரஹ்) அவர்கள் அதனை நழர் பர் கிதம் என்று குறிப்பிட்டு “உன் அகப்பார்வையை
எப்போதும் பூர்வீகனான (கதீம்) அல்லாஹ்வின் மீதே வை” என்று சொன்னார்கள்.
No comments:
Post a Comment