Wednesday, July 15, 2015

ரமலான்’2015 part-2


இறைவன் சங்கை (கரீம்) ஆனவன்:
’யா அய்யுஹல் இன்சானு மா கர்ர(க்)க பிரப்பி(க்)கல் கரீம்” – “மனிதனே! சங்கையான உன் ரட்சகனை விட்டும் உன்னை மருட்டியது எது?” (82:6)
(எனவே மாயை (குரூர்) விலகும் போது இறை பிரக்ஞை (தக்வா) தோன்றுகிறது)

சங்கையான இறைவன் அருளிய வேதமும் சங்கை (கரீம்) ஆனது:
”இன்னஹு லகுர்ஆனுன் கரீம்” – “நிச்சயமாக இது சங்கை மிக்க குர்ஆன்” (56:77)

அந்த வேதம் அருளப்பட்ட மாதம் ரமலான். அதுவும் சங்கை (கரீம்) ஆனது:
”ஷஹ்ரு ரமலானல்லதீ உன்ஸில ஃபீஹில் குர்ஆன்” – “ரமலான் எத்தகைய மாதம் எனில் அதில் குர் ஆன் இறக்கப்பட்டது” (2:185)

ரமலானில் கடமை ஆக்கப்பட்டுள்ள நோன்பின் நோக்கம் தக்வா. அதனை அடைந்தவர்களும் சங்கை (கரீம்) ஆவார்கள்:
“இன்ன அக்ரம(க்)கும் இந்தல்லாஹி அத்கா(க்)கும்” – நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிகவும் சங்கையானவர் உங்களில் தக்வா உள்ளவரே” (49:1)
l

நாம் இங்கே நோன்பு திறப்பதற்காக அமர்ந்திருக்கிறோம். இது ஏதோ விருந்து என்பது போல் ஆக்கப்பட்டு விட்டது. சிறப்பு இஃப்தார் விருந்துகள் என்னும் பெயரில் அரசியல் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. அதற்கும் நோன்பின் நோக்கத்திற்கும் எள் முனை அளவும் தொடர்பு இல்லை. ஆன்மிக விருந்தாக இருக்க வேண்டிய ஒன்று அரசியல் விருந்தாக மலிந்துவிட்டது.

’இஃப்தார்’ என்னும் சொல்லின் ரகசியங்களை அறியாமல் நாம் அதை ஆன்மிக விருந்தாக்க இயலாது. இஃப்தார் என்றால் திறப்பு என்னு பொருள். எனவேதான் தமிழில் நாம் இதனை ‘நோன்பு திறத்தல்’ என்று சொல்கிறோம். இந்தச் சொல்லின் உட்பொருள்கள் நமக்குத் திறந்தாக வேண்டும்! இல்லை எனில் நோன்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்ற இயலாமல் போய்விடும்.

”ஃபாத்திஹா” என்றாலும் திறப்பு என்றுதான் பொருள். அதன் வேர்ச்சொல் ‘ஃபதஹ’ என்பது. திறத்தல், வெற்றி பெறல் என்பது அதன் அர்த்தங்கள். ஃபத்ஹ் என்றால் வெற்றி. 

ஃபலாஹ் என்றாலும் வெற்றி. தொழுகைக்கு அப்படி ஒரு பெயர் உண்டு. ஃபலாஹ் என்னும் தொழுகையில் ஃபாத்திஹா என்னும் திறப்பே வெற்றியின் வாசல் ஆகிறது.

இஃப்தார் என்னும் திறப்பு கொஞ்சம் வித்தியாசமானது. இதன் வேர்ச்சொல் ’ஃபதர’ என்பது. உடைத்துத் திறத்தல் என்பது இதன் பொருள். எனவேதான் நோன்பு திறத்தல் என்பதை ஆங்கிலத்தில் ‘break fast’ என்று சொல்கிறோம்.

’ஃபலக’ என்றாலும் உடைத்துத் திறத்தல் என்று பொருள் உண்டு. “ஃபலக்” என்றால் வைகறை, விடியல். அதனை ஆங்கிலத்தில் ‘day break’ என்று சொல்கிறோம்.

மூடியிருக்கும் கதவுகளைத் திறப்பதற்கும் அக்ரோட் ஓட்டினை உடைத்துத் திறப்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?

இஃப்தார் என்னும் திறப்பு அக்ரோட் ஓட்டினை உடைத்துத் திறப்பது போல. இன்னும் பொருத்தமாகச் சொல்வதெனில் தட்டித் திறப்பது. இது முட்டையின் ஓட்டினை உடைப்பது போன்றதல்ல. அது வெறும் உடைத்தல், திறத்தல் அல்ல.

ஃபலக, ஃபதஹ, ஃபதர என்னும் இம்மூன்று வேர்ச் சொற்களில் இருந்தும் இறைவனைக் குறிக்கும் மூன்று திருநாமங்கள் உண்டு: அல்-ஃபாலிக், அல்-ஃபத்தாஹ், அல்-ஃபாத்திர்.

”இன்னல்லாஹ ஃபாலிக்குல் ஹப்பி வன்-நவா” – “நிச்சயமாக அல்லாஹ்வே விதைகளையும் கொட்டைகளையும் பிளப்பவன்” (6:95)

”ஹுவல் ஃபத்தாஹுல் அலீம்” – “அவனே திறப்பாளன் அறிவாளன்” (34:26)

அல்ஹம்துலில்லாஹி ஃபாத்திருஸ் ஸமாவாத்தி வல் அர்ள்” – “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” (35:1)

இம்மூன்று பெயர்களுக்கும் ஒன்றுடன் ஒன்று ஆழமான அர்த்தத் தொடர்புகள் உண்டு.
விதைகளைப் பிளந்து திறத்தலைக் குறிப்பிடும் வசனத்தில் இறைவனுக்கு “ஃபாலிக்” என்னும் பெயர் சொல்லப் பட்டுள்ளது. விதை பிளப்பதற்கு அறபியில் ’ஃபலாஹ்’ என்னும் சொல்லும் உண்டு. அதற்கு ’வெற்றி’ என்று அர்த்தம். பாலை மணலில் பேரீத்தம் விதை பிளந்து முளை விடுவது என்பது உண்மையில் மாபெரும் வெற்றி அல்லவா? ஃபதஹ் என்றாலும் வெற்றி.

ஃபலக் என்றால் விடியல். இறைவன் தானொரு மறைந்த பொக்கிஷமாக இருந்த நிலை, படைப்புக்கள் வெளிப்படாமல் இருந்த நிலை, அவை அதமிய்யத் non-existence என்பதாக இருந்த நிலை, பேரிருள் என்று உருவகம் பெறும். எனவே படைப்பு வெளிப்படத் தொடங்கிய நிலை விடியல் ஆகும். ஃபாலிக் என்னும் சொல் விதைகளைப் பிளப்பவன் எனில், படைப்புக்களின் முதல் விடியலும் பிரபஞ்ச விதையின் பிளப்பிலிருந்து வந்ததே. அந்தப் பிரபஞ்ச விதை “முஹம்மதின் ஒளி” (நூரே முஹம்மதி) எனப்படுகிறது.
இனி இஃப்தார் என்பதன் பக்கம் கவனம் செலுத்துவோம்.

இஃப்தார் என்றால் திறத்தல். ஆனால் திறப்பவன் யார்?

அல்லாஹ்வின் பெயர் “அல்-ஃபாத்திர்”. அதாவது அல்லாஹ்வே ஃபாத்திர் (திறப்பவன்). அவனை அன்றித் திறப்பவன் வேறு யாரும் இல்லை. லா ஃபாத்திர இல்லா ஹுவ.  

என்னில் நோன்பைத் திறப்பவன் அவனே. ஏனெனில், என்னில் நோன்பை வைத்தவனும் அவனே. வைத்தவன்தானே திறக்கவும் வேண்டும்!

”அஸ்ஸவ்மு லீ வ அனா அஜ்ஸீ பிஹி” – “நோன்பு எனது. அதற்கு நானே நற்கூலி தருகிறேன்” (புகாரி, முஸ்லிம், மாலிக், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா).

நோன்பு அவனது என்னும் போது அதனை அவன் அன்றி வேறு எவர் திறக்க முடியும்?

”வல்லதீ ஹுவ யுத்-இமுனீ வ யஸ்கீனி” – ”அவனே எனக்கு உணவூட்டுகிறான், அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்” (26:79)

உணவும் பானமும் அடியானுடன் தொடர்பு படுத்தப்பட வேண்டும். ஏனெனில் உணவும் பானமும் அடியானின் தேவைகள். பசியும் தாகமும் அடியானின் நிலைகள். 
இறைவனுக்கு அந்நிலைகள் இல்லை. அவனுக்கு உணவு பானம் தேவை இல்லை.

உணவையும் பானத்தையும் அடியானுடன் தொடர்பு படுத்தி, ஊட்டுதல் குடிப்பாட்டுதல் ஆகிய செயல்களை இறைவனுடன் அடையாளப்படுத்த வேண்டும். இந்த அகப்பார்வையே ’தக்வா’. அடியானின் உண்ணுதல் பருகுதலில், அந்த அடியானுக்கு ஊட்டுபவனாக, அந்த அடியானிலேயே அல்லாஹ்வை நோட்டமிடுவது தக்வா என்னும் நிலை ஆகும்.

இஃப்தார் என்பதன் வேர்ச்சொல்லான ஃபதர என்பதில் இருந்து ஃபித்ரத் என்னும் சொல் கிளைக்கிறது. ஃபித்ரத் என்றால் இயல்பு இயற்கை என்று பொருள். பசியும் தாகமும் நமது ஃபித்ரத். ”நோன்பு எனது” (அஸ்ஸவ்மு லீ) என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் என்ன? உணவும் பானமும் இணைவிழைச்சும் தேவை இல்லாத நிலை என்பது இறைவனின் இயல்பு. அவன் நம்மில் தனது இயல்பை வெளிப்படுத்திப் பார்ப்பதே நோன்பு. நோன்பாளி தன்னில் அவனையே நோட்டமிட வேண்டும். அதுவே தக்வா என்னும் இறைப் பிரக்ஞை ஆகும்.

இஃப்தார் என்பது நோன்பைத் திறப்பது எனில், திறந்து காணும் பொருள் யாது? அவனேதான்!

“வ அனா அஜ்ஸீ பிஹி” – “அவனுக்கு நானே நற்கூலி தருகிறேன்” என்பதன் உட்பொருள் என்ன? “அவனுக்கு நானே நற்கூலி” என்பதுதான். இறைவன் அடியானுக்குத் தன்னையே தருகிறான் என்பதன் பொருள், அடியானுடன் அவன் எப்போதும் இருக்கிறான் என்னும் உணர்வை அனுபவத்தை அந்த அனுபவத்தின் பரவசத்தைத் தருகிறான். தன் இருப்பின் பிரக்ஞையை அடியானுக்கு அருள்கிறான். அந்தப் பிரக்ஞை நோன்பு திறந்த பின்னும் அடியானில் தொடர்ந்து வரும்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் முதல் நாளில் கொண்டாடப்படும் பெருநாளும் ”ஈதுல் ஃபித்ரு” என்பதாகவே பெயர் பெறுகிறது. ரமலான் முழுவதும் ஒரு நோன்பு நிலையாகப் பார்க்கப் பட்டால், பெருநாள் அந்த நோன்பின் இஃப்தார் ஆகிறது!

நாம் மீண்டும் நமது இயல்புக்குத் திரும்பி விடுகிறோம் என்பது மட்டுமல்ல ஈதுல் ஃபித்ரு. ரமலான் மாதத்தில், ஒவ்வொரு நாளும் இஃப்தாரில் அடையப் பெற்ற தக்வா என்னும் இறை ப்ரக்ஞையைப் பேணியபடி இனி வாழப்போகிறோம் என்பதே அதன் தாத்பரியம்.
l

நாம் இங்கே இஃப்தாருக்காக அமர்ந்திருக்கிறோம். நம் முன் பல வகையான உணவுகளும் பானங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் தக்வா செய்ய வேண்டிய பயிற்சியே இந்த இஃப்தார்.

நோன்பாளியான என்னில் மட்டுமா அல்லாஹ் இருக்கிறான்? இந்த உணவுகளிலும் பானங்களிலும் அவனே பிரசன்னமாகி இருக்கிறான். இதை உணர்ந்து கொள்ளவே இஃப்தார்.

என்னில் நோன்பைப் பேணியதும் அவனே; என்னில் நோன்பைத் திறப்பதும் அவனே.
நோன்பாளிக்கு இது மிகவும் மகிழ்ச்சியான நேரம்.

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: “லிஸ்ஸியாமி ஃபர்ஹ(த்)தானி யஃப்ரஹுஹுமா இதா அஃப்தர ஃபரிஹ வ இதா ல(க்)கிய ரப்பஹு ஃபரிஹ பிஸவ்மிஹி” – “நோன்பாளிக்கு இரண்டு பேரின்பங்கள் உண்டு. ஒன்று இஃப்தாரில். மற்றொன்று அவன் தனது ரட்சகனைச் சந்திக்கும்போது, நோன்பின் காரணமாக.” (புகாரி: கிதாபுஸ் ஸவ்ம்: 1904)

இறைவனின் திருக்காட்சியால் அடையும் இன்பத்துடன் இஃப்தாரின் இன்பம் இணைத்துச் சொல்லப்பட்டிருப்பது அந்த இன்பத்தின் மேன்மையைக் காட்டுகிறது.

பொதுவாக, எது ஒன்றிற்காக நாம் காத்திருக்கிறோமோ அதன் நினைவு நமக்கு அடிக்கடி வருவது மனித இயல்பு. எது ஒன்றின் தேவை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறதோ அதன் நினைவு அடிக்கடி வந்துகொண்டிருப்பது தவறு என்று சொல்ல முடியாது.

நோன்பு வைத்திருக்கும் நிலையில் மனதில் உணவு பானம் பற்றிய நினைவு, கற்பனை வந்து கொண்டே இருப்பது மனித இயல்புதான். நமது ஃபித்ரத் அது. ஆனால் நமது ஃபித்ரத்தில் அல்லாஹ்வின் ஃபித்ரத்தை நோட்டமிடவும் வேண்டும்.

மறுமையில் இறைவனின் லிகா (சந்திப்பு) என்பதுதான் பேரின்பம் எனில் இம்மை முழுவதும் அந்த தரிசன இஃப்தாருக்கான நோன்புதான். அந்த லிகாவின் நினைவிலேயே ஒருவன் மூழ்கி இருப்பது இபாதத் (வழிபாடு) அல்லவா?

அப்படியானால், நோன்பின் பேரின்பம் இஃப்தாரில் எனில் அந்த இஃப்தாரின் நினைவில் மனம் மூழ்கி இருப்பதும் இபாதத் (வழிபாடு)தானே? ஏனெனில், நோன்பாளியிடம் உணவு பானம் ஆகியவற்றின் கோலத்தில் சந்திக்க வருபவன் அந்த இறைவனே! இறைவன் எந்தக் கோலத்தில் (ஷகல்) என்னிடம் வரவிருக்கிறானோ அந்தக் கோலத்தின் நினைவு எதார்த்தத்தில் அவனின் நினைவே!

தக்வா இல்லை நீங்கள் ஷகலைப் பார்த்து ஏமாந்து போவீர்கள். (இறைப் பிரக்ஞை இல்லை எனில் நீங்கள் கோலத்தைப் பார்த்து ஏமாந்து போவீர்கள்).

ஷகலின் நிஸ்பத்தில் அவனது ஷுகலை அடையும் தருணமே இஃப்தார் (நோன்பு திறப்பு என்பது கோலத்தின் தொடர்பில் அவனது அனுபவத்தை அடையும் தருணமே ஆகும்).

மறுமையில் புறக்கண்களாலும் இறைவனை தரிசிக்கும் பேரின்பம் இருக்கிறது. 

இம்மையில், அகக்கண்களால் இறைவனை தரிசிக்கும் பேரின்பத்தை அடைவதற்கான பயிற்சியே இஃப்தார். எனவே இஃப்தாரின் இன்பம் இறைச் சந்திப்பின் இன்பத்துடன் சொல்லப்பட்டது. 

No comments:

Post a Comment