Tuesday, July 13, 2021

விளக்க முடியாத வாழ்க்கை கொண்ட மனிதன்


             முன்பு ஒரு காலத்தில் மவ்ஜூது என்று ஒருவர் இருந்தார். அரசு அலுவலராக சிறிய வேலை கிடைத்து நகரம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். பதவி உயர்வு பெற்றுக் கணக்காயர் ஆகி அவரின் வாழ்நாள் முடிந்து போகும் என்று தோன்றியது.

            ஒருநாள், தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் பாழடைந்த பழைய கட்டடம் ஒன்றைச் சுற்றி இருக்கும் தோட்டத்தில் அவர் உலவிக் கொண்டிருந்த போது சூஃபிகளின் வழிகாட்டியான கிள்ரு என்னும் மர்ம நபர் பளபளக்கும் பச்சை அங்கி அணிந்து அவரின் முன் தோன்றினார். கிள்ரு சொன்னார்: “ஒளி மயமான எதிர்காலம் கொண்டவரே! வேலையை விட்டுவிடு. மூன்று நாட்களில் ஆற்றங்கரைக்கு வந்து என்னைப் பார்.” உடனே அவர் மறைந்துவிட்டார்.

            மவ்ஜூது நடுங்கியபடி தன் மேலதிகாரியிடம் சென்று தான் வேலையை ராஜினமா செய்வதாகச் சொன்னார். ஊரார் மிக விரைவிலேயே இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். “மவ்ஜூது பாவம், அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது,” என்றார்கள். சீக்கிரமே அவரை மறந்தும் போனார்கள்.

            குறிப்பிட்ட நாளில் மவ்ஜூது, கிள்ருவைச் சந்தித்தார். கிள்ரு அவரிடம் சொன்னார்: “உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு இந்த ஆற்றுக்குள் பாய்ந்துவிடு. உன்னை யாரேனும் காப்பாற்றக்கூடும்.”

            மவ்ஜூது அப்படியே செய்தார். தான் உண்மையிலேயே பைத்தியம் ஆகிவிட்டோமோ என்று அவருக்கே தோன்றியது.

            அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் மூழ்கவில்லை. ஆனால் ஆற்றின் போக்கில் அவர் வெகுதூரம் போய்விட்டார். அப்போது மீனவன் ஒருவன் அவரை இழுத்துத் தனது படகுக்குள் போட்டான். “மடையனே! ஆற்று வெள்ளம் கடுமையாக இருக்கிறது. நீ என்ன செய்வதாய் நினைப்பு?” என்று அவன் கத்தினான்.

            மவ்ஜூது சொன்னார்: “உண்மையில் எனக்குத் தெரியாது.”

            ”நீ ஒரு கிறுக்கன்,” என்றான் மீனவன். “ஆனால், கவலையை விடு. அதோ அங்கே ஆற்றங்கரையில் இருக்கும் என் குடிசைக்கு உன்னைக் கூட்டிச் செல்கிறேன். உனக்கு என்ன செய்யலாம் என்று பொறுமையாக யோசிப்போம்.”


            
மவ்ஜுது கல்வி கற்றவன் என்பதைக் கண்டதும் மீனவன் அவரிடம் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டான். அதற்குப் பகரமாக மவ்ஜூதுக்கு உணவு கொடுத்தான். மீனவனின் வேலைக்கு மவ்ஜூது ஒத்தாசையாக இருந்தார். சில மாதங்கள் கழித்து கிள்ரு மீண்டும் தோன்றினார். மவ்ஜூது படுத்திருந்த கட்டிலின் கால்மாட்டில் வந்து நின்றுகொண்டு அவர் சொன்னார்: “இப்போதே எழுந்து மீனவனை விட்டுப் போய்விடு. உனக்கு வாழ்வாதாரம் தரப்படும்.”

            ஒரு மீனவனைப் போல் ஆடை அணிந்து கொண்டு மவ்ஜூது உடனே குடிசையை விட்டு வெளியேறினார். நெடுஞ்சாலைக்கு வந்து சேரும் வரை அவர் அலைந்து கொண்டிருந்தார். காலை விடிந்து கொண்டிருந்தது. கழுதை மீது விவசாயி ஒருவன் சந்தைக்குப் போவதைக் கண்டார். “நீ வேலை தேடுகிறாயா?” என்று அவன் மவ்ஜூதிடம் கேட்டான். “சந்தையில் வாங்கும் சரக்குகளைக் கொண்டு வர எனக்கு ஓர் ஆள் தேவைப்படுகிறது.”

            மவ்ஜூது அவருடன் சென்றார். அப்படியாக அவர் அந்த விவசாயிக்கு இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவர் விவசாயம் பற்றி மிக அதிகமாகக் கற்றுவிட்டார். வேறு சில தொழில்களையும் கொஞ்சம் கற்றுக் கொண்டார்.

            ஒரு மதிய நேரம் அவர் கம்பளி நூற்றுக் கொண்டிருந்தபோது கிள்ரு அவர் முன் தோன்றினார். “இந்த வேலையை விட்டுவிடு. மவ்சில் நகருக்குப் போ. உன் சேமிப்பை வைத்து நீ ஒரு தோல் வணிகன் ஆகிவிடு.”


            
மவ்ஜூது கீழ்ப்படிந்தார்.

            அவர் மவ்சில் நகரில் ஒரு பிரபலமான தோல் வணிகர் ஆனார். மூன்று ஆண்டுகள் அவர் சிறப்பாக வணிகம் செய்திருந்த காலத்தில் கிள்ருவை ஒருமுறை கூட அவர் காணவில்லை. அவரிடம் ஏகப்பட்ட பணம் சேர்ந்துவிட்டது. எனவே, வீடு ஒன்றை வாங்கலாம் என்று நினைத்தார். அப்போது கிள்ரு அவரிடம் தோன்றிச் சொன்னார்: “உன் பணத்தை என்னிடம் கொடுத்துவிடு. இந்த ஊரை விட்டு வெளியேறு. தூரத்தில் உள்ள ஏதாவது ஊருக்கு… சமர்கந்துக்குப் போ. அங்கே மளிகைக்காரரிடம் வேலை செய்.”


            
மவ்ஜூது அப்படியே செய்தார்.

            அப்போது அவரிடம் பையப் பைய ஞானத்தின் அடையாளங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. தனது ஓய்வு நேரத்தில் அவர் நோயாளிகளை குணப்படுத்தினார், கடையில் தனது சக ஊழியர்களுக்கு சேவைகள் ஆற்றினார். ரசகசியங்களைப் பற்றிய அவரின் அறிவு நாளுக்கு நாள் ஆழமானது.

            மார்க்க அறிஞர்கள், தத்துவவாதிகள் மற்றும் பிறர் அவரை அணுகிக் கேட்டார்கள்: “நீங்கள் யாரிடம் கல்வி கற்றீர்கள்?”

            ”அதைச் சொல்வது கடினம்,” என்றார் மவ்ஜூது.

            அவரின் சீடர்கள் கேட்டனர், “உங்கள் பணியை நீங்கள் எப்படி ஆரம்பித்தீர்கள்?”

            ”ஒரு சிறிய அரசு அலுவலராக,” என்றார் அவர்.

            ”சுய சீர்திருத்தத்துக்காக நீங்கள் அந்த வேலையை விட்டுவிட்டீர்களா?”

            ”இல்லை. நான் சும்மா விட்டுவிட்டேன்.”

            அவர் சொல்வது அவர்களுக்குப் புரியவில்லை.

            அவரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வடிக்க வேண்டும் என்று மக்கள் அவரை அணுகினார்கள்.

            ”வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்?” என்று அவர்கள் கேட்டனர்.

            ”நான் ஒரு ஆற்றுக்குள் குதித்தேன். மீனவன் ஆனேன். பிறகு மீனவனின் குடிசையை விட்டு ஒரு நள்ளிரவில் வெளியேறினேன். அதன் பின், நான் ஒரு விவசாயி ஆனேன். கம்பளி திரித்துக் கொண்டிருந்தபோது என் மனதை மாற்றிக்கொண்டு மவ்சிலுக்குப் போனேன். அங்கே நான் ஒரு தோல் வணிகர் ஆனேன். அங்கே கொஞ்சம் பணம் சேமித்தேன். ஆனால் அதை கொடுத்துவிட்டேன். பிறகு நான் நடந்து சமர்கந்துக்கு வந்து சேர்ந்தேன். இங்கே ஒரு மளிகைக்காரரிடம் வேலை பார்த்தேன். இதோ இப்போது இப்படி இருக்கிறேன்.

            ”ஆனால் நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆன்மிக ஆற்றல்களையும் ஞானத்தையும் அது விளக்குவதாக இல்லையே?” என்று அவரின் சரிதக்காரர்கள் கேட்டனர்.

            ”அப்படித்தான்,” என்றார் மவ்ஜூது.

            எனவே, சரிதக்காரர்கள் மவ்ஜூதுக்காக ஓர் அற்புதமாக வாழ்க்கை வரலாற்றைப் புனைந்து எழுதினர். ஏனெனில், ஞானிகள் எல்லாருக்குமே ஓர் அற்புத வரலாறு இருந்தாக வேண்டும்! அந்தக் கதை பொது மக்களின் ரசனைக்குத் தீனி போடுவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமே தவிர ஆன்மிக வாழ்வின் எதார்த்தங்களுக்குத் தோதாக இருப்பது அல்ல.

            கிள்ரு பற்றி நேரடியாகப் பேச ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவேதான் இக்கதை உண்மையாக இல்லை. இது ஓர் வாழ்வின் சித்திரம். இது மாபெரும் சூஃபிகளில் ஒருவரின் உண்மையான வாழ்க்கை.

db

            ’மறைவுலகம்’ என்பது எல்லா நேரங்களிலும் பல்வேறு இடங்களில் வெளிப்படையான எதார்த்தத்துடன் குறுக்கிடுகிறது என்னும் சூஃபி நம்பிக்கையை விளக்குகின்ற முக்கியமான கதை இது என்று ஷைகு அலீ ஃபர்மாதி (இறப்பு: பொ.ஆ.1078) அவர்கள் கருதுகிறார்.

            விளக்க முடியாத அல்லது விளங்க முடியாத நிகழ்வுகள் என்று நாம் சொல்வதெல்லாம் இந்த குறுக்கீட்டினால் விளைபவையே என்று அவர் சொல்கிறார். மேலும், நிகழும் காரியங்களுக்கெல்லாம் காரணங்களைத் தாம் அறிந்திருப்பதாகப் பொது மக்கள் நினைக்கிறார்கள். அதனாலேயே அவர்களால் இந்த மறைவுலகக் குறுக்கீடுகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை. சாதாரண அனுபவங்களில் அப்பாலுலகின் எதார்த்தங்கள் குறுக்கிட முடியும் என்னும் சாத்தியத்தைப் பற்றி எப்போது அவர்களின் சிந்தை கருதுமோ அப்போதுதான் அது அவர்களுக்குப் புலப்படும்.

            பின்னாளில் நக்‌ஷ்பந்திய்யா நெறி என்று பெயர் பெற்ற சூஃபி அமைப்பின் குருமார்களில் (ஃகாஜகான்) ஷைகு அலீ ஃபர்மாதி அவர்கள் பத்தாம் ஷைகாக (குருவாக)வும் போதனை ஆசானாகவும் இருக்கிறார்.

            இந்தப் பிரதி பதினேழாம் நூற்றாண்டில் லாலா அன்வர் எழுதிய ஹிக்காயத்தே அப்தாலான் (’மாற்றமடைந்த ஞானியரின் கதைகள்’) என்னும் ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதைக்கு நான் எழுதியுள்ள விளக்கக் குறிப்பு:

            இந்தக் கதைக்கான விளக்கவுரையை நான் எழுத மாட்டேன். ஏனெனில், ஏற்கனவே இந்தக் கதைக்கான விளக்கவுரை (தஃப்ஸீர்) ஒரு நூலாக வெளிவந்துள்ளது. மட்டுமல்ல, அதை நான் மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். மிக அற்புதமான விளக்கவுரை அது. செய்தவர் ஓஷோ! 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “Wisdom of the Sands” (மணல்களின் ஞானம்) என்னும் அவரது நூலின் இரண்டாம் பாகத்தில் முதல் அத்தியாயமாக இக்கதையின் விளக்கம் இடம்பெற்றிருந்தது. பின்னர், 1988-இல் இக்கதையின் விரிவுரை மட்டும் ”Mojud – The Man with the Inexplicable Life” என்னும் தலைப்பில் “An ancient Sufi story with commentary by Bhagwan Shree Rajneesh” என்று முன் அட்டையில் அச்சிடப்பட்டுத் தனி நூலாக அவரின் கையெழுத்துடன் 112 பிரதிகள் மட்டுமாக அமெரிக்காவில் நியோ சந்யாஸ் இண்டெர்நேஷனல் அமைப்பால் வெளியிடப்பட்டது (ISBN: 0-945360-00-2, முதற்பதிப்பு 5000 பிரதிகள்). அந்த நூற்பிரதியின் பிடிஎஃப் கோப்பு என்னிடம் உள்ளது.  



            இந்தக் கதையின் விளக்கவுரையை ஓஷோ நிகழ்த்தியது பற்றிய குறிப்பு ஒன்று அந்நூலின் 45-ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது:

            ”2 மார்ச் 1978-இன் காலையில் இந்தியாவில் பூனாவில் உள்ள ஸ்ரீரஜ்னீஷ் ஆசிரமத்தில் பகவான் ஸ்ரீரஜ்னீஷ் தன் சீடர்களுடன் அமர்ந்து ’மவ்ஜூது: விளக்க முடியாத வாழ்க்கை கொண்ட மனிதன்’ என்னும் இந்தத் தொன்மையான சூஃபிக் கதையின் மீது விளக்கவுரை வழங்கினார்”



            எண்பது பக்கங்கள் கொண்ட இச்சிறு நூலில் நாற்பத்து நான்கு பக்கங்களில் படங்களுடன் பெரிய எழுத்தில் இச்சிறிய சூஃபி கதை அச்சிடப்பட்டுள்ளது. 46-ஆம் பக்கத்தில் இருந்து 80-ஆம் பக்கம் வரை ஓஷோ (அப்போது பகவான் ஸ்ரீரஜ்னீஷ்) பேசிய விளக்கவுரை இடம்பெற்றுள்ளது.

            தனது விளக்கவுரையை ஓஷோ இப்படி ஆரம்பிக்கிறார்:

            “இன்று நாம் உள்ளே செல்லவிருக்கும் கதை மகத்தான கதைகளில் ஒன்று. ஒரு சூஃபிக் கதையில் மட்டுமே இருக்கக் கூடிய தனித் தன்மையான சுவை இதில் உள்ளது. இது ஒப்பிட முடியாத ஒன்று. இந்தக் கதையை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் நீங்கள் மதத்தின் ரகசியத்தையே புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம். இந்தக் கதையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்களால் ஒருபோதும் மதத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது.

            ”இது சமயப் பிரக்ஞையின் அடித்தளத்திற்கு உரியது. இது இல்லாமல் சமய உருமாற்றம் இருக்க முடியாது. எனவே இந்தக் கதையை முடிந்தவரை மிகக் கவனமாகக் கேளுங்கள். இந்தக் கதை உங்கள் இருப்பினுள் ஆழ்ந்து விடட்டும். இந்தக் கதை ஒரு கதவைத் திறக்கக் கூடும்; உங்கள் வாழ்வில் நீங்கள் பழைய ஆளாக இல்லாத அளவுக்கு உங்களிடம் இக்கதை ஓர் அடிப்படை மாற்றத்தை நிகழ்த்தக் கூடும். ஆனால் இந்தக் கதை மிகவும் உன்னிப்பாக, நுணுக்கமாக, மிகவும் ஓர்மையாக, மிகவும் அன்பாகக் கேட்கப்பட வேண்டும். ஏனெனில், இது ஒரு விசித்திரமான கதை.

            ”இது வெறுமனே கதை அல்ல; சூஃபிக் கதைகள் எல்லாம் வெறுமனே கதைகள் அல்ல. அவை உங்களுக்கு வேடிக்கை காட்டுவதற்கு இல்லை. உங்கள் பொழுது போக்கிற்காக அவை இங்கே இல்லை. அவை எல்லாம் பயிற்சிக் கருவிகள். அவை ஏதோ ஒன்றைக் குறிக்கின்றன, ஏதோ ஒன்றைக் காட்டுகின்றன, ஏதோ ஒன்றைச் சுட்டுகின்றன. அவை சுட்டிகள், அறியப்படாத ஒன்றை நோக்கிய அம்புக் குறிகள், நிலவைச் சுட்டும் விரல்கள். சூஃபிகளின் இந்த வாக்கியத்தை நினைவில் வையுங்கள்: “என் விரலைக் கடிக்காதே, நான் சுட்டும் இடத்தை நோக்கு.” (பக்கம்:46)

            இந்த நூலின் பின் அட்டையில் வில்லியமெட் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பேராசிரியர் ஆன டெட் ஷே என்பவர் ஓஷோவின் விளக்கவுரை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: “இச்சிறு நூலில் அவர் மிகவும் எளிய, பழைய, காய்ந்து போன அரக்கு நிற சூஃபி நாணல் ஒன்றைக் கையில் எடுத்து தனது அன்பான கவனத்தால் அதை ஒரு புல்லாங்குழல் ஆக்கியிருக்கிறார். அதில் அவர் பரவச கீதத்தை இசைக்கிறார்.”

             இந்த நூலை நீங்கள் படித்துப் பார்த்தால் அந்த கீதத்தை நீங்களும் கேட்கலாம். நான் மிகவும் வியந்தும் ரசித்தும் படித்த நூற்களில் இதுவும் ஒன்று.

            ஓஷோவின் நூலில் கையாளப்படும் இக்கதைப் பிரதி இத்ரீஸ் ஷாஹ்வின் இந்த நூலில் (Tales of the Dervishes) இருந்து எடுக்கப்பட்டதே. அதன் ஒரு சொல்லைக்கூட அவர் மாற்றவில்லை. ஓஷோவை மிகவும் கவர்ந்த சூஃபி எழுத்தாளர் இத்ரீஸ் ஷாஹ். 1984-இல் ஓஷோவிற்குப் பல்லில் சிகிச்சை செய்ய வேண்டி நேர்ந்தது. பல்மருத்துவ இருக்கையில் அமர்ந்தபடியே அவர் தான் நேசித்த நூற்களைப் பற்றிச் சிறு சிறு குறிப்புகள் பேசினார். ஒவ்வொரு நாளும் பத்து நூற்கள் என்று பத்து நாட்கள். அவற்றின் தொகுப்பு ”The Books I have Loved” (’நான் நேசித்த நூற்கள்’) என்றொரு தனி நூலாக வெளிவந்துள்ளது. அதில் இத்ரீஸ் ஷாஹ்வை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் ஒரு குறிப்பிட்ட நூலை அல்ல. ஆளையே குறிப்பிடுகிறார், இப்படி: “நான்காவதாக: ஒரு மனிதர், இத்ரீஸ் ஷாஹ். அவரின் நூற்களில் எதையும் நான் குறிப்பிட மாட்டேன், ஏனெனில் அவை எல்லாமே அழகானவை. இந்த மனிதரின் ஒவ்வொரு நூலையும் நான் பரிந்துரைக்கிறேன்.”



            அக்டோபர் 1977-இல் வெளிவந்த ’தர்ஷன் டைரி’ வரிசை நூலான “Only Losers Can Win This Game” என்னும் நூலின் அனுபந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓஷோ (பகவான் ஸ்ரீரஜ்னீஷ்) நூல் வரிசையில் ”Rajneesh Book of Nothing – 200 Blank Pages to Play With” என்றொரு நூல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் இத்ரீஸ் ஷாஹ்வைப் பின்பற்றி ஓஷோவின் சீடர்கள் அவரின் பெயரால் வெளியிட்ட ஒரு நூல்தான்.

            இத்ரீஸ் ஷாஹ் வெளியிட்ட அந்த சூஃபி நூலின் தலைப்பு “The Book of the Book” (நூலின் நூல்) என்பதாகும். அந்நூல் 1969-இல் முதன் முதலில் வெளியிடப்பட்டது (ISBN 978-1-78479-078-3). 2016-இல் இத்ரீஸ் ஷாஹ் ஃபவுண்டேஷன் (ISF) வெளியிட்டுள்ள பதிப்பு மொத்தம் 278 பக்கங்கள் இருக்கின்றன. அதில் இந்த நூல் உருவாகி வந்த வரலாறு என்று ஒன்பது சிறிய குறிப்புக்களை இத்ரீஸ் ஷாஹ் எழுதியிருக்கிறார். மீதமுள்ள பக்கங்கள் எல்லாம் எதுவுமே எழுதப்படாத /  அச்சிடப்படாத வெற்றுப் பக்கங்களே.



            இந்த நூலுக்கு இத்ரீஸ் ஷாஹ் குறிப்புக்கள் எழுதியிருப்பதை ஓஷோ விமரிசனம் செய்து பேசியுள்ளார். 1971-ஆம் ஆண்டில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அபு மலையில் அவர் தனது சீடர்களுக்கு ’நிர்வானோபநிஷத்’ குறித்து உரையாற்றினார். 26 செப்டம்பர் அன்று பேசிய உரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

            ”சூஃபிகளிடம் ‘The Book of the Books’ (நூற்களின் நூல்) என்றொரு நூல் இருக்கிறது. அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை. அது வெறுமையாக உள்ளது. அதை வெளியிட எந்தப் பதிப்பகத்தாரும் முன்வரவில்லை. அதை அச்சிட யாருக்காவது பைத்தியமா என்ன? அச்சிடுவதற்கு அதில் ஒன்றுமே இல்லையே! அண்மையில், அதை அச்சிடும் துனிச்சல் ஒரு பதிப்பகத்தாருக்கு ஏற்பட்டது. ஏனெனில், அந்த வெறுமையான நூலுக்கு ஒரு முன்னுரை எழுதித்தர முஹம்மது நபியின் வழித்தோன்றல் ஒருவர் சம்மதித்தார். அந்த மனிதர், இத்ரீஸ் ஷாஹ். அவர் அந்த வெறுமையான நூலுக்கு பத்தோ இருபதோ பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதினார். இருபது பக்க முன்னுரையைத் தொடர்ந்து இருநூறு வெற்றுப் பக்கங்கள். ஒருவழியாக அந்த நூல் வெளியாகிவிட்டது.

            ”தவறான நோக்கங்களில் பல பேர் அந்த நூலை வாங்குகிறார்கள். அவர்கள் முன்னுரையைப் பார்க்கிறார்கள் – யார் முழு நூலையும் பார்ப்பது? – ஆனால் பின்னர் அவர்கள் முன்னுரைக்கு அப்பால் புரட்டும்போது புத்தகம் முழுவதும் வெறுமையாகவே இருக்கிறது. அந்த நூல் ஏன் வெறுமையாக இருக்கிறது என்று விளக்கும் முயற்சி அந்த முன்னுரையில் தெரிகிறது. இத்ரீஸ் ஷாஹ் அந்த நூலுக்கு அநியாயம் செய்துவிட்டார் என்று நான் நம்புகிறேன். ஐந்திலிருந்து ஏழு நூற்றாண்டுகளாக மிகத் துனிச்சலான நபர்கள் அந்த நூலை வெறுமையாகவே பாதுகாத்து வைத்துள்ளனர். அதன் ஆசிரியரே அதை வெறுமையாகத்தான் வைத்திருக்கிறார், முன்னுரைக்குத் தேவையே இல்லை. அந்த நூல் அப்படியே வெறுமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதைப் பதிப்பிக்க ஒருவரும் முன்வரவில்லை. மேலும், அதை வாசிக்கவும் யாரும் தயாராக இருந்திருக்க மாட்டார்கள். அதனால்தான், வேறு வழியின்றி இத்ரீஸ் ஷாஹ் அந்தத் தப்பான காரியத்தைச் செய்ய வேண்டியதாகிவிட்டது.” (”Behind a Thousand Names – Talks on Nirvana Upanishad” / chapter#2 The Inner Light.)

            இத்ரீஸ் ஷா எழுதியுள்ள அந்த ஒன்பது சிறு குறிப்புக்களை மொழிபெயர்த்து நான் இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தருகிறேன். அத்துடன் நான்கைந்து வெற்றுப் பக்கங்களாவது இருக்க வேண்டும். ஏனெனில் உண்மையான ”நூலின் நூல்” அந்த வெற்றுப் பக்கங்கள்தாம்! அப்படி எனில், “தர்வேஷ்களின் கதைகள்” என்னும் இந்த நூலை வாங்கிய உங்களுக்குத் தொன்மையான சூஃபி நூல் ஒன்றும் இணைப்பாகக் கிடைத்து விட்டது என்றாகிறது!

            இத்ரீஸ் ஷாஹ் எழுதியுள்ள குறிப்புக்களில் இந்த நூலை முதன் முதலின் வைத்திருந்த சூஃபி ஞானியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த நூலைப் பின்னாளில் மாலி என்பவர் வைத்திருந்ததாகவும் அதை துருக்கியில் வாழ்ந்த சூஃபி ஞானி காஜா அஹ்மத் யசவி அவர்கள் வாங்கியதாகவும் இத்ரீஸ் ஷாஹ் குறிப்பிட்டிருக்கிறார். ஓஷோ அந்த நூல் முதலில் மவ்லானா ரூமியிடம் இருந்ததாகப் பேசியிருக்கிறார்:

            ”ஒரு மாபெரும் சூஃபி நூல் இருக்கிறது. உலகத்திலேயே சிறந்த நூல் என்று அதை நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை! அது முழுவதும் வெறுமையாக இருக்கிறது.அது ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையானது. அதை முதன் முதலில் விலைக்கு வாங்கியவர் மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி. அவரின் சீடர்களுக்கு இது புரியாத புதிராகிவிட்டது. அந்த நூலை மவ்லானா ரூமி எவரின் முன்னிலையிலும் வாசிப்பதில்லை என்பதும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. அதை அவர் தனது தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். எல்லாரும் போன பிறகு அறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு அந்த நூலை எடுத்து அவர் வாசிப்பார். எல்லாரிடமும் இச்செயல் இயல்பாகவே ஆர்வத்தைக் கிளப்பிற்று. ”என்ன விதமான மர்ம புத்தகம் அது?” அதை அறிந்துகொள்ள தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் மக்கள் முயன்றனர். சில நேரங்களில் ரூமியின் அறைக்கு மேல் கூரை மீது சில சீடர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நோக்கினார்கள். ஆனால் ரூமி வாசிக்கும் நூல் என்ன என்பதை அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.



            ”ஜலாலுத்தீன் ரூமி இறந்த அன்று, ஜலாலுத்தீன் ரூமியை விடவும் அவர்கள் அந்த புத்தகத்தைப் பற்றித்தான் கவலைப்பட்டனர். ஆனால் அவர்கள் ஜலாலுத்தீன் ரூமியை நேசித்தனர். சூஃபிகள் வேறு எந்த குருநாதரை நேசித்ததை விடவும் அதிகமாக அவர்கள் ரூமியை நேசித்தனர். மவ்லானா என்றால் அன்பான குரு என்று பொருள். அந்தச் சொல் ஜலாலுத்தீன் ரூமிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, வேறு எவருக்கும் அல்ல. சூஃபிகளின் உலகில் கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளில் ஜலாலுத்தீன் ரூமியை விடவும் வசீகரமான, அழகான, அன்பான, மனிதாபிமானம் கொண்ட வேறு ஒருவர் இல்லை.

            ”ஆனால், தமது குருநாதர் இறந்துவிட்டார் என்பதைக்கூட அந்தச் சீடர்கள் மறந்துவிட்டனர். அவர்கள் விரைந்து சென்று அவரின் தலையணைக்குக் கீழிருந்து அந்த நூலை உருவியெடுத்துப் பார்த்தனர். அவர்கள் திகைத்துவிட்டார்கள் – அந்த நூல் முற்றிலும் வெறுமையாக இருந்தது! வாசிக்க அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் ரூமிக்கு மிக நெருக்கமாக இருந்த அணுக்கச் சீடர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்கள்.

            ”வார்த்தைகள் விடப்பட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு மௌனம் நிகழும்.

            ”மௌனமாய் இரு என்பதே அந்த நூலின் முழு போதனை. முதலில் வார்த்தைகளை வடியவிடு. அடுத்து ஒலிகளையும் அடங்க விடு. பிறகு அங்கே ஒரு வெறுமை இருக்கிறது. ஓர் இன்மை. தூய வெளி. அந்தத் தூய்மையே தியானம் என்பது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக எந்தவொரு பதிப்பகத்தாரும் அதை வெளியிடத் தயாராக இல்லை. ’இதில் பதிப்பதற்கு ஒன்றுமே இல்லையே?’ என்று அவர்கள் நிச்சயம் கேட்டிருப்பார்கள். கடைசியில் சூஃபி குரு ஒருவர் அதனைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்போது அது கிடைக்கிறது – ஆனால் அது வெறுமனே வெற்றுப் பக்கங்கள் மட்டுமே. அது ‘புத்தகங்களின் புத்தகம்’ என்று அழைக்கப்படுகிறது.

            ”ஓசையில் இருந்து மௌனத்திற்கு நகருங்கள்.” (”The Great Pilgirmage” /  chapter#21 From Here to Here.)

            ஓஷோ இந்த நூலின் தலைப்பை “Book of Books” (நூற்களின் நூல் / புத்தகங்களின் புத்தகம்) என்றே குறிப்பிடுகிறார். ஆனால், இத்ரீஸ் ஷாஹ் அதன் தலைப்பை “Book of the Book” (நூலின் நூல் / புத்தகத்தின் புத்தகம்) என்றே குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் ஓஷோ ஒரு நுட்பமான விசயத்தைத் தவற விடுகிறார் என்று படுகிறது. “Book of Books” என்பதினும் ”Book of the Book” என்னும் தலைப்பு ஆழமானது, சூஃபித்துவப் பின்னணியில் பொருள் செறிந்தது. “Book of the Book” என்னும் ஆங்கில வாசகத்தில் உள்ள “the” என்னும் definite article தொனிக்கும் அர்த்தத்தைத் தமிழாக்க இயலாமல் தடுமாறுகிறேன். அறபியில் இந்த அங்கில வாசகம் “கிதாபுல் கிதாப்” என்று பொருள்படும். கிதாப் என்றால் நூல் (Book) என்று பொருள். அல்-கிதாப் (The Book) என்றால் குறிப்பிட்ட ஒரு நூலைக் குறிக்கும். அல்லது அது மட்டுமே நூல் என்று அழுத்தம் தரும். அத்தகைய நூல் இறைமறை (வேதம்) மட்டுமே. இஸ்லாத்தில் ’அல்-கிதாப்’ என்பது இறைமறையான குர்ஆனைக் குறிக்கவே பயன்படுத்தப்படும் சொல்லாகும். இறைமறையாம் குர்ஆன் அறபி மொழியில் அமைந்திருக்கிறது. மனிதகுலத்தினருக்காக அது அறபி மொழியில் அருளப்பட்டது. எல்லா மொழிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே. அறபி மொழியும் ஒரு படைப்புத்தான். ஏனெனில், எல்லா மொழிகளும் ஒலியை அடிப்படையாகக் கொண்டவை. அறபி மொழியும் ஒலிகளால்தான் அமைந்திருக்கிறது. ஒலி என்பதே படைப்புத்தான். ஆனால் இறைவனின் பேச்சு ஓசைகளையும் எழுத்துக்களையும் கடந்தது (பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்). அதை நாம் மௌனம் என்றுதான் விளங்கிக்கொள்ள முடியும். மௌனத்திற்குத்தான் ஒலியும் எழுத்து வடிவமும் கிடையாது. அறபி மொழியில் எழுதப்படும் திருக்குர்ஆன் வரிவடிவத்தின் ஆரம்ப வாசகமாக இருப்பது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” (’அருளாளனும் அன்பாளனும் ஆன அல்லாஹ்வின் திருப்பெயரால்’) என்பதாகும். இதன் முதல் எழுத்து அறபி அட்சர வரிசையின் இரண்டாம் எழுத்தாக அமைந்த ’பே’ என்னும் பகரம் ஆகும். இந்த வேதப் பிரதி ஒரு பகரம்தான். அதன் மூலம் – அசல் – என்பது இறைவனின் ஞானத்தில் இருக்கிறது. அது நமக்குப் புலப்படாது. அரபி அட்சர வரிசையின் முதல் எழுத்தான அலிஃப் என்னும் எழுத்து நமக்குப் புலப்படாத அந்த இறைஞானத்தில் உள்ள திருமறையைக் குறிக்கும். அதனுடன் இந்த புலப்படும் வேதத்துக்கு ஒரு தொடர்பு இருக்கிறது. இது அதன் வெளிப்பாடுதான். எனவே, பிஸ்மில்லாஹ் என்னும் வாசகத்தை எழுதும்போது அந்த அலிஃப் இந்த ‘பே’ என்னும் பகரத்துடன் இணைந்திருப்பது போல் சற்றே நீட்டி எழுதப்படுகிறது. வேறு இடங்களில் ‘பே’ என்னும் எழுத்து அப்படி எழுதப்படாது. இது ஒரு சமிக்ஞை. அந்த புலப்படாத மறைவான வேதத்தையே எழுத்துக்கள் இல்லாத வெற்றுப் பக்கங்கள் குறிக்கின்றன. எனவேதான், ”Book of the Book” (நூலின் நூல் / கிதாபுல் கிதாப்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


    
        இந்தக் கதையின் முடிவுப் பகுதி கவனிக்கத்தக்கது. ”Truth is stranger than fiction” என்னும் ஆங்கிலச் சொலவடைக்கு உதாரணமாக அது இருக்கிறது. உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை மவ்ஜூது சொல்லும்போது சரிதக்காரர்களால் அதை நம்பவே முடியவில்லை. எனவே மக்கள் நம்பும்படியான ஒரு கதையை அவருக்கு அவர்கள் புனைகிறார்கள். இந்தப் பகுதி அப்படியே ஒரு நாவலில் கையாளப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எழுத்தாளர் யான் மார்டெல் எழுதிய தத்துவப் புதினமான “Life of Pi” (’’பை’யின் வாழ்க்கை’, 2001) என்னும் நாவலின் முடிவு இதே போல் அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். அந்த நாவல் உலகப் புகழ் பெற்றதுடன் 2012-ஆம் ஆண்டு ஆங் லீ-இன் இயக்கத்தில் ஆங்கிலத் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. சரக்குக் கப்பல் சிதலமடைந்து 227 நாட்கள் ஒரு படகில் புலி ஒன்றுடன் இருந்து கரையை அடையும் இளைஞன் பிசைன் பட்டேல் ஜப்பானிய அதிகாரிகளிடம் நடந்த உண்மைகளைச் சொல்லும்போது அவர்கள் அதை நம்ப முடியாமல் மறுக்கிறார்கள். எனவே அவனே அவர்கள் நம்பும்படியான ஒரு கற்பனைக் கதையைப் புனைந்து கூறுகிறான். அப்போதுதான் அவன் உண்மையைக் கூறுகிறான் என்று அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

1 comment:

  1. வார்த்தைகளற்ற மெளனம்
    மௌனம் புரிந்து கொள்ள மௌனம் வேண்டுமா ? ஒலிகள் வேண்டுமா ? ஒலிகளுக்குள் மௌனம். மௌனத்திற்குள் ஒலி . வாழ்த்துகள் அருமையான பதிவு.

    ReplyDelete