Thursday, October 29, 2020

நபிப் பெருநாள்

 

            ”பெரிதினும் பெரிது கேள்” என்றான் பாரதி.

            ”காணி நிலம் வேண்டும்” என்பது அவன் வைத்த உலகாய்தக் கோரிக்கைகளுள் ஒன்று.

            காணி நிலம் என்பது அளவு சொல்லிக் கேட்டதன்று. காணி நிலம் என்றால் உரிமை நிலம் என்று பொருள் என விளக்குகிறார் தி.ந.ரா.

காணி என்றால் அது ஒரு நில அளவைக் கணக்கு என்றே பொதுவாக எண்ணப்படும். அப்படி எண்ணி, கவிஞர் தேவதேவன் ஒரு குறுங்கவிதை எழுதியிருந்தார்:

            ”காணி நிலம் கேட்டேன்

            ககனம் முழுதும் தந்தாய்!”

            தேவதேவன் எழுதிய இந்த அற்புதமான கவிச்சுடரை அப்படியே அங்கையால் அள்ளி எடுத்துக்கொண்டு ஊதிப் பெருக்கி திரைப்பாடல் செய்திருக்கிறார் பாடற்றொழில் செய்யும் வைரமுத்து:

            ”மலர்கள் கேட்டேன்
            வனமே தந்தனை.
            தண்ணீர் கேட்டேன்
            அமிர்தம் தந்தனை.
            எதை நான் கேட்பின் 
            உனையே தருவாய்?”

            நேற்றொரு துறைமை அங்காடியுள் நுழைந்து பொருள் வாங்கித் திரும்பத் தொடங்கியபோது இப்பாடல் ஒலிக்கத் தொடங்கிற்று. பல்லவி மட்டுமே செவிப் பட்டது.

இந்த வரிகளைச் சிந்தித்துக் கொண்டே வந்தேன். இதை அப்படியே இறை வேட்டலாக மாற்றிச் சிந்தித்தால்? இதயத்தில் எதை எதையோ வேட்கிறோம். வேட்பன இறைவனிடம் கேட்கிறோம்.

இறைவனிடம் அவனையே கேளுங்கள் என்று சூஃபி ஞானியர் சொல்லுவர்.

எதைக் கேட்டால் இறைவன் தன்னையே தருவான் என்று எண்ணிய போது என் சிந்தை அவனுக்கும் நபிகள் நாயகத்துக்கும் உள்ள உறவை எண்ணிற்று.

அவனிடம், அவனைக் கேட்டால் நபியைத் தருவான்; நபியைக் கேட்டால் தன்னையே தருவான்!

நபி (ஸல்) அவர்களை நேசிக்கும் அனைவருக்கும் நெஞ்சம் இனிக்கும் நபிப்பெருநாள் வாழ்த்துக்கள்.


1 comment:

  1. மாஷா அல்லாஹ்
    அல்லாஹும்ம ஸல்லி வ ஸல்லிம் வ பாரிக் அலைஹி.

    ReplyDelete