Monday, September 9, 2019

பாரதி தடுமாறினான்...


     ’கம்பன் ஏமாந்தான்’ என்று எழுதினார் கண்ணதாசன். என்ன ஏமாற்றம்? ‘இளம் கன்னியரை ஒரு மலரென்றானே, கற்பனை செய்தானே’ என்று விடையும் சொன்னார். அது ஓர் அழகியல் பாடல்.

      அண்மையில் பழ.கருப்பையா பேசிய உரை ஒன்றை யூட்யூபில் பார்த்தேன். அதிலவர் பாரதிதாசனைத் தமிழினத்தின் கவிஞன் என்று பேசுங்கால் ’பாரதிக்கும்கூட தடுமாற்றம் இருந்தது’ என்று ஒரு கருத்தினை உதிர்த்தார். அதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.


      பாரதியின் வரிகளில் நான் உடன்பட முடியாத வரிகள் உண்டு. குறிப்பாக, இஸ்லாமியச் சமயம் பற்றிய அவரது சிந்தனைகள் தரவுப் பிழைகள் உடையன என்பது அனைவரும் அறிந்ததே. பலதார மணம் கூடாது என்பதை வலியுறுத்தி எழுத அவர் ஓர் முஸ்லிமைக் கதாப்பாத்திரமாகப் புனைந்ததன் பின்னணியில் சமய அரசியல் இருக்கிறது என்று வாதிப்பார் உளர். இருக்கலாம். அது தனி ஆய்வு. அக்கதையில் முஸ்லிம் ஒருவன் உடன் பிறந்த சகோதரிகள் இருவரை மனைவியராகக் கொண்டிருந்தான் என்று பாரதி எழுதியிருப்பார். உடன் பிறந்த சகோதரிகள் ஏக நேரத்தில் ஒரே ஆணுக்கு மனைவியராக இருக்க முடியாது என்பது இஸ்லாமியச் சட்டம் (மனைவி ஒருவர் இறந்து விட்டால் அதன் பின்னர் அப்பெண்ணின் உடன் பிறந்த சகோதரியை மணம் முடிக்க அனுமதி உண்டு). இது பாரதியிடம் சுட்டிக் காட்டப்பட்டபோது தவறை ஏற்றுக்கொண்டு விளக்கம் எழுதுவார். ஆனால் அவர் தனது கதையில் திருத்தம் செய்யவில்லை. பொறுப்புள்ள ஓர் எழுத்தாளன் அதைத்தான் செய்ய வேண்டும். மாறாக, தனது கதையில் பிழை சுட்டிக் காட்டப்பட்டமைக்கு பாரதியார் எரிச்சல் அடைகிறார். அது அவர் தந்த விளக்கத்தில் தெளிவாகத் தெரிகிறது. தன் சமயம் / சமூகம் பற்றியாகட்டும் அல்லது பிற சமயம் / சமூகம் பற்றியாகட்டும், தரவுகளைப் பிழையின்றித் திரட்டிக் கொண்டுதான் எழுத்தாளர் கதையோ கவிதையோ கட்டுரையோ எதுவாயினும் எழுதுதல் வேண்டும். இஸ்லாம் பற்றி எழுதுமிடங்களில் பாரதியார் அப்பொறுப்பில் வழுவி இருக்கக் காண்கிறோம்.

      ”திக்கைத் தொழும் துருக்கர்” என்றும் “தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி / முகமலர் மூடி மறைத்தல்” என்றும் அவரெழுதிய வரிகளில் எல்லாம் உண்மை வழுப்பட்டுள்ளது. துருக்கி நாட்டினைச் சேர்ந்தவர்களே ”துர்க்” என்று சொல்லப்படுவர். (அவ்வினம் சார்ந்த இன்னொரு தனி நாடான “துர்க்மெனிஸ்தான்” 1991-இல் உருவானது). தமிழில் இவர்களைத் துருக்கர் என்றும் துருக்கியர் என்றும் சொல்லப்படும். துருக்கர்கள் பெரும்பான்மை முஸ்லிம்கள் என்பது உண்மையே. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் உண்டு. துருக்கர் என்பது சமயச் சொல் அல்ல, நாட்டையும் இனக்குழுவையும் குறிக்கும் சொல். முஸ்லிம்களைத் துருக்கர் என்றோ அதன் மரூஉவாகத் துலுக்கன் என்றோ குறிப்பிடுவது ’டருக்கி டவல்’ என்பதை ’முஸ்லிம் துண்டு’ என்று சொல்வது போன்றது. 


      










 ’திக்கைத் தொழும் துருக்கர்’ என்னும் வரி இஸ்லாமியச் சமயம் பற்றிய புரிதல் இன்மையால் விளைந்த பிழைபட்ட வரி. முஸ்லிம்களுக்குத் தொழுகை திசை உண்டு. அது கிப்லா (முன்னோக்கும் திசை) என்று சொல்லப்படும். அது உலகப் பரப்பில் நாட்டுக்கு நாடு மாறும். இந்தியாவிலிருந்து அது மேற்கு திசை எனில் ருஷ்யாவுக்குத் தெற்காகவும் அமெரிக்காவுக்குக் கிழக்காகவும் இருக்கும். ஆதி ஆலயம் என்று இஸ்லாம் குறிப்பிடும் ’கஃபா’வை முன்னோக்கிய திசையே கிப்லா (அதாவது, தொழுகையில் முன்னோக்கும் திசை). திசையைத் தொழுவது என்பது இஸ்லாமியச் சமய அடிப்படைக் கொள்கைக்கே விரோதமான கருத்து. ”திக்கைத் தொழும்” என்பதைத் “திக்கில் தொழும்…” என ஒரு சிறு மாற்றம் செய்தால் பாரதியார் செய்த பிழை களையப்படும்.


      










 இனி, ”தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி / முகமலர் மூடி மறைத்தல்” என்பதிலும் பிழைகள் உள்ளன. இப்பாடல் கணவனும் மனைவியும் தனித்திருக்கும் நிலையில் பாடுவதாக அமைந்துள்ளது. கணவனிடமும் மனைவி முகத்தைக் காட்டாமல் மூடி மறைக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவே இல்லை. (அப்படிச் சொன்னால் விவஸ்தை ஆகுமா?). அன்னிய ஆடவரிடம் முகம் காட்டாமல் இருக்கச் சொல்கிறது. இதைக் கணவன் தன் மனைவிடம் பாடுவதாகச் சொல்லி பாரதியார் பிழைபடுகிறார். ராஜபுத்திரப் பெண்களுக்கும் அவ்வழக்கம் இருந்தது. அது இஸ்லாத்தில் இருந்து வந்ததன்று. இந்துச் சமயப் பண்பாடு அது. தில்லியில் துருக்கர் வந்த பின்னர்தான் ’பர்தா’ என்னும் ’முகமலர் மறைத்தல்’ ஏற்பட்டது என்று சொல்வது வரலாற்றுப் பிழை.


      என் மனத்தில் எப்போதும் உருத்திக் கொண்டிருக்கும் இன்னொரு பாரதிப் பாடல் அடி அவரது ஆத்திசூடியின் தோற்றுவாயில் உள்ளது:

      ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
      மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
      கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
      மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
      ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
      உருவகத் தாலே உணர்ந் துணராது
      பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
      ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
      அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
      அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.”

      இது பாரதி இயற்றிய அற்புதமான பாடல்களில் ஒன்று எனத் தட்டில்லை. எனினும், சமய சமத்துவ நோக்கு கொண்டு எழுதப் புகுந்தால் பிழைகள் ஏற்படவே செய்யும். சமயக் கருத்துக்களை உள்ளபடி உண்மை உரைத்தால் சமத்துவம் காட்டல் அரிது. தேவையுமன்று. அமைதிக்கு ’வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது போதும்.

      இப்பாடலில், முறையே சைவம் வைணவம் இஸ்லாம் கிறித்துவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட ஒவ்வொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவை அனைத்தையும் உருவகங்கள் என்று குறிப்பிடுகிறார். அதில்தான் சிக்கல் எழுகின்றது.

      பாரதியைப் பொருத்தவரை இந்தச் சமயக் கருத்துக்கள் அனைத்தும் உருவகங்களாக இருக்கலாம். அப்படிக் கருதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அதை நாம் மறுக்கவியலாது. ஆனால், அவ்வச்சமயங்களுக்கு இது ஏற்புடையதா? என்று நோக்கும்போது சிக்கல் எழுகிறது.

      சிவன் ஆத்தி சூடியவன், சுடுகாட்டுச் சுடலைத் திருநீறு பூசிய வெண் மேனியான், கைலாய பனிவெற்பில் மோன தவத்தில் அமர்ந்துளான் என்பதெல்லாம் உருவகமா? ஆம் என்று ஏற்கிறது சைவம். அச்சமயத்தின் சித்தாந்தம் பயின்றார்க்கு இஃது விளங்கும். சிவன் ஓர் ஆணாகக் காட்டப்படுவது உருவகம்தான். பார்வதி பெண்ணாகக் காட்டப்படுவது உருவகம்தான். எனவே பாரதியார் இதனை உருவகம் என்று சொல்வது அச்சமயப்படியே பிழை இல்லை. பாரதியார் சைவ சித்தாந்தத்தில் ஆழங்காற்பட்டவர் என்று சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன் விளக்கியுள்ளார். அதற்கு முரணாக பாரதியார் ஒரு கருத்தினை வரைய மாட்டார்.

      அடுத்து, ”கருநிறம் கொண்டு பாற்கடல் மிசைக் கிடப்போன்” என்று திருமாலைச் சுட்டுகிறார். கருநிறம் என்பது உருவகமா? ஆம் என்கிறது வைணவம். (விசிஷ்டாத்வைத தரிசன விளக்கம் பயின்றார்க்கு இது விளங்கும்). பாற்கடல் என்பது உருவகமா? ஆம் என்கிறது வைணவ மெய்யியல்.

      அடுத்து, “மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்” என்பதை ஓர் உருவகம் என்கிறார் பாரதியார். இதனை உருவகம் என்று சொல்வதன் விளக்கம் என்ன? விடை இல்லை. இதனை உருவகம் என்று சொல்வதை இஸ்லாம் ஏற்காது. அப்படிச் சொல்வது இஸ்லாமிய அடிப்படையை மறுப்பதாகிறது.

      பொதுவாகச் சிந்தித்து நோக்கினும் இவ்வரியில் பாரதியார் எவ்வளவு பிழை பட்டிருக்கிறார் என்று விளங்கும். ஆக்கல் காத்தல் அழித்தல் கரத்தல் அருளல் ஆகிய இறைத் தொழில்களைப் பேசுகிறது சைவம் (தொழில் என்பது ஈண்டு செயல் என்று பொருள். ‘நமக்குத் தொழில் கவிதை’ என்றார் பாரதி. அதற்கு இயங்குதல் என்று பொருள். Job என்று பொருளன்று). இவை எல்லாம் உருவகமே என்றால் அது நாத்திகத்திற்கு இட்டுச் செல்லும்.

’இறைவன் படைக்கிறான்’ என்பது சமயங்களுக்கு எதார்த்தம். நாத்திகப் பார்வையில் அது ஓர் உருவகமே அன்றி எதார்த்தம் அன்று.

‘இறைவன் காக்கின்றான்’ என்பது சமயங்களுக்கு எதார்த்தம். நாத்திகப் பார்வையில் அது ஓர் உருவகமே அன்றி எதார்த்தம் அன்று.

இன்னனமே பிற தொழிற்களுக்கும் கூட்டுக.

எனில், அருளல் என்பது எப்படி உருவகம் ஆகும்? சமயங்களின்படி அது எதார்த்தம் அல்லவோ?

இறைவன் எல்லோர்க்கும் அருளவே செய்கிறான். பொதுவாக அனைத்துப் படைப்புக்களுக்கும் அவன் அருளுபவை உள்ளன. சிலருக்கு மட்டுமென்று அவன் அருளுவனவும் உள. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நிலைகளில் பல்விதங்களில் அருளுகிறான். இது எல்லாச் சமயத்தவரும் ஒப்பும் கருத்தியல். எனில், மறை அருளல் எப்படி உருவகமாகும்?

“ஏசுவின் தந்தை” என்பது உருவகமா? எதார்த்தமா? “The only begotten son” என்பது உருவகம் என்று பரக்க விளக்குகின்ற கிறித்துவ மெய்யியலாளர்கள் உள்ளனர். ”ஏசுவின் தந்தை” என்பது உருவகமே எனச் சொல்பவர் கிறித்துவத்திலிருந்து விலகியவர் ஆக மாட்டார். அப்படிச் சொல்லிக்கொண்டு ஒருவர் கிறித்துவராக இருக்க முடியும். மட்டுமன்று, அப்படிச் சொல்பவர் கிறித்துவ மெய்யியில் தளத்திற்கு உயர்ந்த ஒருவராகவும் (elite level) இருக்க முடியும்.

பொதுவாக, அனைத்துச் சமயங்களிலும், பெரும்பான்மை மக்கள் எதார்த்தம் என்று விளங்குகின்ற பலவும் மெய்யியல் தளத்தில் உருவகங்களாகவே இருக்கும். மெய்யியல் தளத்திலும் சமயங்கள் எதார்த்தம் என்று கொள்வன நாத்திகத்தின் பார்வையில்தான் உருவகங்கள் என்று பார்க்கப்படும். நாத்திகத்தைப் பொருத்த மட்டில் கடவுளே ஓர் உருவகம்தான். எனவே, கடவுள் ஓர் உருவகமே என்று சொல்பவர் ஆத்திகராக இருக்க முடியாது. அப்படிச் சொன்ன கணத்திலேயே அவர் ஆத்திகரல்லர், நாத்திகர் என்றாகி விடுகிறது. எனவேதான், கடவுளின் எதார்த்தம் என்ன என்பது பற்றிப் பேசுங்கால் (பாரதி சொல்வது போல் உணர்ந்தும் உணராதும் பேசும்போது) ‘அனைத்தையும் மீறிய ஒரு சக்தி’ ‘அண்டங்களை எல்லாம் இயக்கும் பேராற்றல்’ என்றெல்லாம் பேசுவார்களே தவிர ‘கடவுள் ஓர் உருவகம்’ என்று ஆத்திகர்கள் பேசார்.

தெய்வம் உண்டு என்று உரைப்பதே ஆத்திகம் (’தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்’ – பாரதியார்). எனினும், கடவுளின் இருப்பை எதார்த்த உண்மை என்று சொல்லும் ஆத்திக நெறிகளும் கடவுளின் மீது பற்பல உருவகங்களை ஏற்றி விளக்கியிருக்கின்றன. (உ-ம்: ‘ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியும் அல்லன்’ என்று திருமாலின் எதார்த்தம் உரைக்கிறார் நம்மாழ்வார். இது கடவுட் கொள்கை. ‘பச்சை மா மலை போல் மேனி / பவழ வாய் கமலச் செங்கண்’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் செய்திருக்கும் வருணனை உருவகம். இதனை மாலிய மெய்யியல் பயின்றோர் அறிவர், ஏற்பர்)

      ’மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்’ என்பது இஸ்லாத்தில் பொது நிலையிலும் மெய்யியல் நிலையிலும் எதார்த்தமே அன்றி உருவகமன்று. அதனை உருவகம் என்று சொல்பவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் ஆகிறார். ஏனெனில், நபிகள் நாயகத்திற்குத் திருமறை (இறக்கி) அருளப்பட்டது என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்று. இறை நம்பிக்கையை மெய்ப்படுத்தும் கொள்கைகளுள் ஒன்று (’ஈமானே முஃபஸ்ஸல்’ என்று சொல்லப்படுவன). அதை மறுப்பவன், எதார்த்தம் அல்ல - உருவகமே என்பவன் இறையை மறுத்தவனே. எவ்வொரு இஸ்லாமிய மெய்யியலாளரும், சூஃபி ஞானியருள் எவரும் மறையருள் புரியப்பட்டது எதார்த்தமன்று உருவகமே என்று சொன்னதில்லை என்பதை மனம் கொள்க.

      எனில், இஸ்லாத்தில் இறைவனைக் குறித்த உருவகங்களே கிடையாதா? என்று கேள்வி எழலாம். விளக்குவாம்.

      உருவகங்களைப் பொருத்த மட்டில் இஸ்லாத்தின் மீதான ஓர் அவதானம் அனைவருக்கும் உண்டு. அதாவது, உருவகங்கள் உருவ நிலைக்கு இறங்குவதை இஸ்லாம் மிகக் கண்டிப்புடன் மறுத்துவிடுகிறது. இஸ்லாம் உருவ வழிபாட்டுக்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்ததே.

      அடுத்து, படைப்பில் எதுவும் இறைவனுக்கான உருவகமன்று. எப்பொருளையும் சுட்டிக்காட்டி ‘இது இறைவனுக்கான உருவகம்’ என்று இஸ்லாத்தில் சொல்ல முடியாது. மக்கா நகரில் இருக்கும் கஃபா என்னும் ஆதி ஆலயம் – அதுவுமே இறைவனுக்கான உருவகம் அல்ல. அதாவது, அதனை இறைவன் என்று உருவகித்தல் கூடாது. உருவகித்து அதனை வழிபடுதல் கூடாது. ‘பிறையை வணங்கும் துருக்கர்’ என்றொரு அபத்தமான கருத்தை பாரதிதாசன் பாடியிருக்கிறார். பிறையை இறைவனாக உருவகிப்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை.

      இஸ்லாத்தில் இறைவன் மீதான உருவகங்கள் என்பது வருணிப்புக்கள் என்ற நிலையில் மட்டுமே நிற்பன. அவ்வருணிப்புக்கள் முதன்மையாக ’முஹம்மது நபிக்கு மறையருள் புரியப்பட்ட’ வேதமான குர்ஆனில் உள்ளன. அந்த வருணனைகளை “முதஷாபிஹாத்” (உருவகங்கள்) என்றே குர்ஆன் அழைக்கிறது. அவற்றை எதார்த்தங்களாக எடுத்தல் பிழை என்பது இஸ்லாமிய மெய்யியல் அறிஞர்களும் இறைநேசர்களான சூஃபி ஞானியரும் கொண்டுள்ள பார்வை (அவற்றை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு நம்புவோரும் உளர். அவர்தம் பார்வை எனக்கு உடன்பாடில்லை.)

      இறைவன் அர்ஷு என்னும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான் என்பது அத்தகைய உருவகங்களுள் ஒன்று. அர்ஷு என்பது எங்கே இருக்கிறது? ஏழு வானங்களுக்கு அப்பால். இறைவன் அமர்தல் படுத்தல் நிற்றல் நடத்தல் ஓடுதல் முதலிய உருவம் சார்ந்த, படைப்புச் சார்ந்த, குறிப்பாக மனிதனொப்புச் செயல்களை (anthropomorphic movements) விட்டும் தூய்மையானவன். எனினும் இத்தகைய செயலகளைக் கொண்டு அவன் வருணிக்கப்பட்டுள்ளான். அவை உருவகங்களே. முஸ்லிம்கள் அனைவருமே அவை உருவகங்களே என்று ஏற்கிறார்களா என்று கேள்வி எழின், குறைந்தபட்சம், அவை உருவகங்கள் என்று சொல்லும் ஒரு தரப்பாவது இஸ்லாத்தில் இருக்கிறது. அப்படியானதொரு செய்தியைச் சுட்டி ‘உருவகத்தாலே உணர்ந்துணராது’ என்று பாரதியார் பாடியிருப்பார் எனில் அவரது பாடல் பிழை பட்டிருக்காது.

      உதாரணமாக, ”மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்” என்னுமிடத்தில் ”எழுவான் கடந்த அருஷினில் அமர்ந்தோன்” என்று பாடியிருக்கலாம். அப்போது அதனை உருவகம் என்று சொல்வதில் சிக்கல் இருக்காது.


No comments:

Post a Comment