Thursday, July 4, 2019

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 25





















2:164-165 தன்னுடைமை மனிதம் அல்ல

      உனக்குச் செய்வதற்கு ஏதுமில்லாத போது அல்லது சூழ்நிலைகள் உனக்குத் தடையாகும்போது அல்லது உனக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல் நீ உணரும்போது, அசைவுகளின் உள்ளேயும் அனைத்து வேலைகளின் உள்ளேயும் இயங்குகின்ற ஒருவனிடம் செல். ”வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவை அனைத்தும் அவனிடமே (தேவைகளைக்) கேட்கின்றன. ஒவ்வொரு கணமும் அவனொரு புதிய மாட்சி நிலையில் இருக்கின்றான்.” (55:29). பிரபஞ்சம் மற்றுமதன் செயற்பாடுகளின் படைப்பாளன் அவன். ஒரு நூறாயிரம் அற்புதங்கள், ஒரு நூறாயிரம் நகரங்கள்.

      இந்தக் கதவுகளையும் சுவர்களையும் காற்றையும் உற்றுப் பார். ஒவ்வொரு கலைப் பொருளும் ஒருகாலத்தில் ஜீவனும் பிரக்ஞையும் உயிரும் கொண்டிருந்தது. ஒரு நாள் ஒவ்வொன்றும் மீண்டும் அந்த வாழும் தன்மைகளைப் பெறும். இப்பொருள்கள் அனைத்தையும் நண்பர்களாக, காதலர்களாக, ஒரு நகரமாக, நீ வாழ்நாள் முழுவதும் வசித்து வந்த சமூகமாகப் பார்த்து இவை உன்னைச் சுற்றிலும் இருப்பதன் அருளை உணர்வாயாக.

      உலகின் ஒரு பகுதியை தன்னுடைமை கொள்வது மனிதம் அல்ல; மாறாக, அதன் ஒரு பகுதியை நோக்கிச் செல்லாமல் இருந்துவிடுவதே மனிதத் தன்மையின் சாராம்சம் ஆகும். நாய்ச் சண்டை ஒரு காட்சி. இன்னொன்று, ஒரு மனிதன் தனது செல்வங்களை எல்லாம் செல்வு செய்து நண்பர்களைத் தனது அருகிலிருக்கச் செய்கிறான். மிகவும் நிம்மதியான வழி எது எனில், குடும்பத்தில் ஆண்களும் பெண்களும் தம்முள் கொள்ளும் நேசமும், தாம் ஒருவருக்கொருவர் மற்றும் பிள்ளைகள் மீது காட்டும் அக்கறையும்தான். தமது உடல்நலம் மற்றும் மரணம் பற்றிய அவர்களின் கவலைகள், தமது மதிப்பின்மை பற்றிய அவர்களின் எண்ணங்கள், தாம் தமது பிள்ளைகளைப் பாழ்படுத்துகிறோமோ என்னும் சிந்தனைகள் ஆகியவைதான். இப்பணிவே நல்லறிவு. உன் (ஆன்மிக) வேலையில் நல்ல பலன்கள் ஏற்பாடாமல் இருந்தாலும் அதில் நீ மேலும் உறுதியாக இரு, தான் முதுகில் சுமக்கும் சரக்கின் மதிப்பு என்ன என்பதை அறியாதபோதும் அதனை இலக்கு நோக்கிச் சுமந்து செல்கின்ற கழுதையைப் போலிரு. தனக்கு தீவனம் வைக்கப்படும் நேரத்தை மட்டும் எதிர்பார்த்தபடி அது சென்று கொண்டே இருக்கிறது.

      வெப்புக் காற்று அல்லது குளிர் காற்று என்ன கொண்டு வரும், யாருக்கு உதவும் அல்லது நோவு தரும் என்று ஒருவருக்கும் தெரியாது. ஒரு கணத்தில் நற்பயனாக அல்லது தீய விளைவாக மாற முடியாத எதுவும் இவ்வுலகிலலும் அனுபவத்திலும் இல்லை. இறைப் பண்புகளான தொன்னூற்றொன்பது திருநாமங்கள் ஒவ்வொன்றின் உள்ளேயும்கூட கருணையும் கோபமும் மறைந்திருக்கின்றன. பேய்த்தனம் கடினமான கரத்தால் புறந்தள்ளப் படுகிறது; பேரழகு மென்மையான கரத்தால் அருகில் இழுக்கப் படுகிறது.














2:167 தொடர்புறும் உணர்வுத் திறன்

      இறைவனுடன் தொடர்பு கொள்ளும் உணர்ச்சித் திறன் படைப்புக்களுக்கு இல்லை எனில் அவை எங்ஙனம் தம்முள் ஓய்வு கொண்டு தம் இருப்பை இப்படி அனுபவிக்க இயலும்?

      விலங்குகள், மனிதர்கள், பறவைகள், பூச்சிகள், அனைத்தும் இறைவனின் திருப்பண்புகளின் உள்ளேயே வாழ்கின்றன. மிருகத்தின் உள்ளும் ஒரு பண்பட்ட நிலை இருக்கின்றது. காமம் அல்லது காதலில் ஏற்படும் நெருங்குதலின் அசைவு எதுவும், நட்புக்காக அல்லது உரையாடலுக்காக, மேஜையின் மீதொரு ரகசியப் பேச்சு, உடன் சிரித்தபடிச் சாலையிலொரு நடை, இவை எல்லாம் 2:255 (ஆயத்துல் குர்ஸி) என்னும் திருவசனத்தின் முதல் வரி சுட்டும் இறை மர்மத்தின் உள்ளே நிகழ்பவைதான்: “அல்லாஹு லா இலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்” (நித்திய ஜீவனான அல்லாஹ்வை அன்றி வேறு இறைவன் இல்லை). ஒரேயொரு ஜீவன் மட்டுமே இருக்கின்றது, ஒன்றே ஒன்றுதான்.






















2:174-175 கவன வட்டங்கள்
       
இறை ரகசியத்தின் அடியான் எப்போதும் அழகையும் அருளையும் காண்கிறான். அவற்றின் முன் தனக்குச் செயலும் துனிச்சலும் இல்லை என்பதை உணர்கிறான். தான் எத்தனை அசிங்கமாகவும் விகாரமாகவும் ஆக முடியும் என்பதை அவன் அறிவான். நாம் எதன் மீது கவனம் செலுத்துகின்றோமோ அது நம்மின் பகுதியாக வளர்கிறது. நீ ஒரு நாயை கவனிக்கும் போது நாயின் வாழ்வினுள் நுழைகிறாய். நீ எனக்கு உன் பூனையைக் காட்டினாய். எனவே, நான் உன் பூனையாக இருப்பேன். ஒரு புண்ணிலிருந்து சீழ் வெளியேறி ரத்தம் கட்டுவதை நீ காணும்போது ‘நானே இந்த ரத்தம்’ என்று சொல்லிக்கொள். பூங்காவில் நானே இந்தப் பூக்கள். ஒரு பெண்ணில், நான் இறைவனின் காதலன். ஒப்பரிய விரிவில் அதுவே நான்; மிகப் பரிதாபமான இதயமுடைக்கும் மடமையில் அதுவும் நானே. இறைஞானத்தின் பிரகாசமும் ஆம்.
      
 கவன வட்டங்கள் உன்னைப் பல்வேறு அடையாளங்களில் இட்டுச் செல்கின்றன. நீ ஆகக்கூடிய எதனைக் கண்டும் வியப்புக் கொள்ளாதே.




















2:176 பள்ளிகள் மாறுதல்

      ஷைகு தாஜின் மகன் ஃபக்ருத்தீன் சொல்கிறார், ஜலாலுத்தீன் ஒரு புகழ் பெற்ற சூஃபி மடத்திற்குப் போனார், பிறகு அங்கிருந்து விலகி முதவக்கில் சாலையில் உள்ளதொரு கல்விக் கூடத்திற்குப் போக, அங்கே அவரிடம் பள்ளிகளை மாற்றுவது பற்றிக் கேட்கப்பட்டதாம்.

      அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) மற்றும் பிஸ்மில்லாஹ் (இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்) ஆகிய வாக்கியங்களை அதிகமதிகம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

       நல்லது, நீ என்னிடம் வந்துவிடு என்கிறாராம் ஃபக்ரு கல்லாசி. என்னிடம் ஒரு குழுமம் இருக்கிறது, அதில் நாங்கள் எதையுமே புகழுவதில்லை. இறைவன் அதில் குறிப்பிடப்படுவதே இல்லை. உமக்கு அது பிடிக்கும். அதில் வழிபாடு, சடங்கான அங்கசுத்தி, தலை சாய்த்தல், எதுவுமே இல்லை. அது மிகவும் அமைதியானது.






















2:179 கிரகங்களும் செடிகளும்
         
 ”மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக; (தாவரங்கள் முளைக்கும் போது) பிளவுறும் பூமியின் மீது சத்தியமாக” (86:11-12).

          வானம் என்பது கிரகமும் செடியும் ஆகும். அது தன்னைத் திறந்து கொடுத்து இங்கே சூரியக் கதிர்கள் எட்டும்படிச் செய்கின்றது. செடிகள் ஒருவகையில் கிரகங்களைப் போன்றவைதான். அவை பருவகாலங்களின் வட்டங்களில் பயணிக்கின்றன. அவை இறக்கும்போது எங்கே செல்கின்றன என்பது எவருக்கும் தெரியாது.

          யாரோ அதிகாலையில் மிகவும் குழம்பியபடி எழுகின்றார். வானம் ஏன் காரணமாகவும் பூமி ஏன் விளைவாகவும் இருக்க வேண்டும்? ஏன் மாற்றமாக இருக்கக் கூடாது?

          வான மரத்தில் ஒவ்வொரு விண்மீனும் இலையின் நுனி. அம்மரத்தின் ஒவ்வொரு இலையும் ஒரு நாடளவு பெரிது. அந்த இரவு வானமோ சூரிய மரத்தின் ஓர் இலையின் கீழே சுழல்கிறது. ஆன்மாவிலோ, ஓர் இலையின் கீழே ஒரு பெரும் சமூகமே கூடினாலும் வியப்பு ஏதுமில்லை. ஏனெனில், ஆன்ம மரத்தின் ஓர் இலையின் அளவு இப்பரபஞ்சத்தை விடவும் பல மடங்கு பெரிது.


2:181-182 கி.பி.1210-ஆம் வசந்தம்
           
நீதிபதி ஃபஜரி தனது கனவில் பஹாவுத்தீனைக் காற்றில் உயரத்தில் மிதப்பவராகக் காண்கிறார். அவர் தன் சீடர்களுக்கு, “அர்ஷுடையவன்; பெருந்தன்மையன்” (துல் அர்ஷில் மஜீது – 85:15) என்னும் திருவசனத்தை விவரித்துக் கொண்டிருக்கிறார்.

          துருக்கிய வமிசத்தாரான இரண்டு நபர்கள் சொல்கிறார்கள், நோய்ப்பட்ட இளைஞன் ஒருவன் விழிப்பிலேயே இல்யாஸ் நபி, இறையடியார் கிள்ரு ஆகியோரின் தரிசனத்தைப் பெற்றான் என்று. அவர்கள் அவனிடம் சுவரின் திறப்பு ஒன்றின் வழியாக வந்து இந்தச் செய்தியை வழங்கினார்கள்: வக்‌ஷின் அரசன் இன்னும் பத்தாண்டுகள் ஆட்சி செய்வான் என்று பஹாவுத்தீனிடம் போய்ச் சொல்லு. அதன் பின் ஆட்சி கிலஜ் தகுனிடம் செல்லும், யகான் தகுனிடம் அல்ல.

          இது 1210-ஆம் ஆண்டின் வசந்தத்தில் நடந்தது.

(நூல் முற்றும்)

No comments:

Post a Comment