Monday, October 17, 2016

ரூமியின் தோட்டம்-2

     Image result for sufi dervish painting 

நாம் பேசினால் வார்த்தைகள் ஆகும். தன்னை இறைவன் பேச யாதும் ஆனது. பொருள்படப் பேசுவதே கடினமாக உள்ளது நமக்கு. அவனோ பொருள்களையே பேசுகிறான். நாம் வாய் மூடிக்கொண்டால் அவன் பேசுவான். எதன் வழி? எப்போதும், இதயத்தின் வாசல் கண்களே. வாய் அல்ல. ஏனெனில், கண்கள்தான் ஒளியைப் பேசும். உதடுகள் அல்ல. மவ்லானா ரூமி சொல்கிறார்:

உதடுகள் மூடு
வாய்களைச் செய்வோன் பேசட்டும்
வஸ்துக்களை அது அதுவாய்ச்
சொல்லும் அவன்!
***

      இறைவனிடம் இட்டுச் செல்லும் பாதைகள் எத்தனை? சூஃபிகள் சொல்கின்றனர், அத்தூரூக்கு இலல்லாஹி க நுஃபூஸி பனீ ஆதம் – இறைவனை அடையும் பாதைகள் மனிதர்களின் மூச்சுக்கள் அளவு! எனில், ஒவ்வொரு மூச்சும் இறைவனை அடைவதற்கான ஒரு வாய்ப்பு! எத்தனை வாய்ப்புக்கள் தவறிப் போய்விட்டன! ஏன்? நமக்கு மூச்சுவிடத் தெரியவில்லை! நம் ஒவ்வொரு மூச்சும் வாயு வடிவ எண்ணமாக இருக்கிறது. தேவையற்ற சிந்தனைகளால் நம் மூச்சுக்கள் நஞ்சாகின்றன. நம் தலையே நம் முச்சுக்குத் தளையாக இருக்கிறது. நேர்வழி நடக்க, அது காலுக்குச் செருப்பாக வேண்டும். மவ்லானா ரூமி சொல்கிறார்:

இன்று காண்கிறேன் நபியின் விண்ணேற்றம்
எங்கும் அந்தத் தோழன்,
ஒவ்வொரு செயலிலும்.

காதல் ஒரு மூங்கில் திரை
தேகம் ஒரு தீ

”நேர்வழி காட்டு” என்கிறேன்
நீ சொல்கிறாய்,
“உன் தலையை
உன் பாதத்தின் கீழ் இடு!
என்னுடன் இருப்பதற்கு
நூறு நூறு வழிகளைக் காண்பாய்.

வைகறைத் தொழுகையின்
பாதைகளின் மேலாய்
நூறாயிரம் பாதைகள் உண்டு
***
  Image result for mystic rose virgin mary 

   மனிதன் இருபரிமாணப் படைப்பு. விலங்கும் வானவரும் இணையும் புள்ளி. அவனின் உடல் விலங்கினை ஒத்ததாகவும் அவனின் ஆன்மா வானவரை ஒத்ததாகவும் உள்ளன. அவனது உடல் சமவெளியாகவும் அவனது ஆன்மா மலைச் சிகரமாகவும் இருக்கின்றன. பலரும் சமவெளி வாசிகள்தான். ஒரு சிலரே மலையின் உச்சியில் வாழ்கின்றனர். சமவெளியிலிருந்து மலை உச்சியைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கழுத்து வலிதான் வரும். ஆன்மிகச் சாதகம் என்பது மலையேறுதல். மலைச் சிகரத்திலேயே வளர்க்கப்பட்ட பறவைகளும் உண்டு. ஏசுநாதரின் தாயைப் போல. அதனால்தான், இறைவனின் ஆன்மாவை அவரின் கருவறை சுமந்தது. மவ்லானா ரூமி சொல்கிறார்:

இங்கே நாம் ஊதாரிகளைப் போல்,
முகவாய் தீவனத்துள் மூழ்கிய
மூன்று ஒட்டகங்கள்

இதர ஒட்டகங்கள் கொந்தளிக்கின்றன
தொங்கும் நாவும் வாயில் நுரையுமாய்
ஆனால், அவை மிகவும் கீழே, சமவெளியில்

காற்றடிக்கும் இந்த ஒற்றையடி மலைப்பாதை நமது.
அது போஷிக்கிறது
அது பாதுகாக்கிறது

கழுத்து வலிக்க மலையைப் பார்ப்பதால் மட்டும்
இங்கே வந்துவிட முடியாது நீ

வெளியேறி நடக்க வேண்டும்,
பணமும் பதவியும் பற்றிக் கவல்வோரின் இடம்விட்டு,
நாய்கள் குரைத்துப்
பின் அங்கேயே தங்கிவிடும் இடம்விட்டு

மேலே இங்கே
இசையும் கவிதையும்
தெய்வீகக் காற்றும்

கன்னி மர்யமுக்குப் பேரீத்தம் தந்த
மரமாக இரு,
அவரது இதயத்தின் ‘ஆமீன்’ ஆகு.

(குறிப்பு: கன்னி மர்யம்: கன்னி மேரி மாதா)
***
     
 மதவாதிகளின் உரைகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அவர்களும் வேதத்தை வைத்துத்தான் பேசுகிறார்கள். ஆனால் ஞானிகள் பேசுவது போல் அதில் உள்ளொளி இருப்பதில்லை. சமய அறிஞர்கள் இருவகை. உலமாயே ழாஹிர் (வெளிரங்க அறிஞர்கள்) மற்றும் உலமாயே பாத்தின் (உள்ரங்க அறிஞர்கள்). சூஃபிகள் இரண்டாம் வகையினர். மதவாதியிடம் படிப்பறிவு உள்ளது. ஞானியிடம் இருப்பது பட்டறிவு. உலமாயே ழாஹிர் informative; உலமாயே பாத்தின் transformative. தகவல்கள் அதிகமாகும்போது அது அர்த்தத்தை மறைத்து விடுவதுண்டு, விளக்கினை மறைத்துவிடும் புகை போல. மவ்லானா ரூமி சொல்கிறார்:

சில தீபங்கள்,
ஜீவன் கொண்டு அவை எரிந்த போதும்,
ஒளியை விடவும்
புகையே கக்குகின்றன.

***
  

    கரையில் நின்று அலைகள் எண்ணுவோர் கடலறிஞர் ஆகலாம், ஆனால் ஒருபோதும் அவர் கடலின் காதலர் அல்லர். எண்ணிக்கொண்டிருக்க என்ன இருக்கிறது? ஒரு மணிநேரம் படித்துறையிலேயே தயங்கி நிற்கிறான் படித்தவன். நதிமூலமும் ரிஷிமூலமும் தெரியுமாம் அவனுக்கு. நீச்சல் தெரியாது! மாடு மேய்க்கும் சிறுவன் வந்து சரேலென்று பாய்கிறான் ஆற்றில். பின்னால் வந்து நீருக்குள் இறங்குகிறது, அவன் மேய்க்கும் மாடும்! நல்ல நேரம் பார்த்து வருவதல்ல காதல். அது வரும் நேரத்தினும் வேறு நல்ல நேரம் எது? மவ்லானா ரூமி சொல்கிறார்:

காதல் வருவதெல்லாம்
கையில் கத்தியுடன்!
தயங்கும் வினாக்களுடன் அல்ல,
நற்பெயர் குறித்த அச்சங்களுடன் அல்ல

***

2 comments:

  1. Alhamdullillah. we are expect lots thing in pirpanjakudil, we are feel pure air, silence in the home.

    please write continue rameez bhai with your ustad permission.

    this home not only the Home. we need stay here.

    ashraf.

    ReplyDelete
  2. Everyday will come and check for new post. not only the letters feel lots.

    ReplyDelete