Monday, September 30, 2013

ரூமியின் வைரங்கள் - part 7


வைகறையின் மென்காற்று
வைத்திருக்கின்றது
உன்னிடம் சொல்ல ரகசியங்கள்
மீண்டும் உறங்கச் செல்லாதே

உண்மையில் நீ ஆசைப்படுவதை
கேட்க வேண்டிய தருணம் இது
மீண்டும் உறங்கச் செல்லாதே

இகமும் பரமும் தொட்டுக்கொள்ளும்
கதவின் விளிம்பருகே
முன்னும் பின்னும் அசைகிறார்கள் எல்லோரும்
மீண்டும் உறங்கச் செல்லாதே

அகலத் திறந்துள்ளது கதவு
மீண்டும் உறங்கச் செல்லாதே


வசதிகளை விட்டு ஓடிவிடு
பாதுகாவல் மற
எங்கிருக்க அஞ்சுவாயோ
அங்கே இரு
நற்பெயரை நசி
வசைப்பெயர் வாங்கு!



காதலைத் தேடுவதல்ல உன் வேலை
அதற்கெதிராய்
உன்னுள் நீயே எழுப்பியிருக்கும்
தடைகளை எல்லாம் கண்டுபிடி


காதல் இது:
ரகசிய வானம் நோக்கிப்
பறந்து போ

ஒவ்வொரு கணமும்
நூறு திரைகளை
அப்பால் விழுந்திடச் செய்

போகும்படி விட்டுவிடு
வாழ்வை முதலில்

இறுதியில், காலடி எடுத்துவை
பாதம் இல்லாமல்


ஒளி நிழல் இரண்டுமே
காதலின் நடனம்தான்

காதலுக்குக் காரணமில்லை
தெய்வீகத்தை அளக்கும் கருவி அது

காதலனும் காதலும்
பிரிவற்ற நிரந்தரம்

காதலை விவரிக்க எவ்வளவு முயன்றாலும்
அதன் அனுபவத்தில் மௌனமாகிப் போகிறேன்

என் எழுதுகோல் உடைகின்றது
நழுவி விழுகிறது தாள்

காதலன் காதலி காதல்
ஒன்றென்று ஆன அந்த இடத்தில்

ஒவ்வொரு கணமும் பிரகாசிக்கின்றது
காதலின் ஒளியில்



சிறுகச் சிறுகக் குறைத்துவிடு
மனதிற்கு நீ புகட்டும் இச்சைகளை
திறக்கத் தொடங்கும்
உன் ஆன்மாவின் கண்


மௌலானாவின் ஏழு அறிவுரைகள்
1.தாராளத்திலும் பிறருக்கு உதவுவதிலும் நதியைப் போல் இரு.
2.கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இரு.
3.பிறரின் குறைகளை மறைப்பதில் இரவைப் போல் இரு.
4.கோபத்திலும் சீற்றத்திலும் பிணத்தைப் போல் இரு.
5.பணிவிலும் அடக்கத்திலும் பூமியைப் போல் இரு
6.தாங்கிக்கொள்வதில் கடலினைப் போல் இரு.
7.என்னவாக இருக்கிறாயோ அதுவாகவே தோன்று அல்லது எப்படித் தோன்றுகிறாயோ அதுவாகவே இரு.




1 comment:

  1. எல்லாவற்றையும் pdf ஆக மாற்றி வைத்துக்கொண்டேன்...நல்ல கலெக்‌ஷன்...நன்றி

    ReplyDelete