Monday, September 30, 2013

ரூமியின் வைரங்கள் - part 5


வார்த்தைகளை
நிறுத்தி வை இப்போது

நெஞ்சின் நடுவில்
ஜன்னலைத் திற

உள்ளும் வெளியும்
உயிர்கள் பறந்து திரியட்டும்


ஏமாற்றத்தின் பிறகு
பல நம்பிக்கைகள் செழிக்கின்றன

இருளுக்குப் பின்
ஆயிரம் சூரியன்கள்
திறந்துகொண்டு பிரகாசிப்பது போல்

ஆளவும் மாற்றவும்
வந்துள்ளது காதல்

விழித்திரு, என் நெஞ்சே!
விழித்திரு! 


காயம்தான்
ஒளி உன்னுள்
நுழையும் வாசல்


மரிக்கின்ற ரோஜா
தன்னைத் திறந்து வீழ்கிறது
நறுமணம் தூவி

ஒவ்வொரு வீட்டிற்கும்
சாளரம் ஆவாய் நீ

ஒவ்வொரு களத்திலும்
ரோஜாத் தோட்டம்
ஆவாய் நீயே!


எத்தனை நிம்மதி
வெறுமையாய் இருத்தல்!
பிறகு
இறைவன் வாழலாம்
உன் வாழ்வை!


வார்த்தைகளைப் பயன்படுத்தாத
குரலொன்று உள்ளது,
செவி கொடு!


இங்கே அங்கே
இனம் தேசம் மதம்
புறப்படுமிடம் சேருமிடம்...
அபத்தமான பிரிவுகளை மறந்துவிடு
நீ ஆன்மா!
நீ காதல்!
ஜின் அல்ல, வானவர் அல்ல
மனிதனும் அல்ல நீ


தந்திரக்காரனாய் இருந்தேன் நேற்று
உலகை மாற்றிவிட நினைத்தேன் 
பக்குவப் பட்டுள்ளது அறிவு இன்று
என்னை மாற்றிக் கொண்டிருக்கிறேன்


பற்றியிருத்தல்
விட்டு விடுதல்
இரண்டிற்கும் இடையில்
சமநிலை கொள்வதே
வாழ்க்கை


இதயத்தில் இருந்து மட்டுமே
விண்ணைத் தொடமுடியும் நீ


மறவாதே!
புனிதத் தலத்தின் வாசல்
உன்னுள்தான் உள்ளது



சுடரேற்றப் படுவதற்குக்
காத்திருக்கிறது உன்னுள்
மெழுகுவத்தி ஒன்று

நிரப்பப்படுவதற்கு ஆயத்தமாய்
உன் ஆன்மாவில் உள்ளதொரு வெறுமை

இதை நீ உணர்கிறாய்

இல்லையா?


அரை மூச்சின் அளவே
சுருக்கமான இவ்வாழ்வில்
காதலைத் தவிர
வேறெதையும் விதைக்காதே!



No comments:

Post a Comment