Saturday, September 28, 2013

ரூமியின் வைரங்கள் - part 3


என் வார்த்தைகள்
கப்பலைப் போன்றவை

அதன் அர்த்தங்களோ
கடல்

என்னிடம் வா
உயிரின் ஆழங்களுக்கு

அழைத்துச் செல்கிறேன்


நீ பார்க்கும்
ஒவ்வொன்றிற்கும்
மறைவுலகில் உள்ளன
வேர்கள்


இன்மையிலிருந்து வருகின்றோம்
சுற்றிச் சுழன்றபடி
விண்மீன்கள்
புழுதியாய்ப் பறந்தபடி


புனிதப் பயணப் புறப்பட்டோரே!
நீங்கள் எங்கே? நீங்கள் எங்கே?
தெய்வீகக் காதலி இங்கே இருக்கிறாள்
வாருங்கள் இங்கே! வாருங்கள் இங்கே! 


உன்னைத் தெரியுமா
உனக்கு?

தெய்வீகக் கடிதத்தின் பிரதி

புனித முகத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடி

பிரபஞ்சம்
உனக்கு வெளியே இல்லை

உன்னுள் பார்
எதை நீ தேடுகின்றாயோ
அதுவாகவே இருக்கிறாய்
இப்போதே!


சொர்க்கச் சோலையின்
பறவை நான்

பூமிப் பந்தின்
பிரஜை அல்லன்

ஓரிரு நாட்களுக்காகச்
செய்யப்பட்ட கூண்டு
என் உடல்



காதல் என்னிடம் சொன்னது:
என்னையன்றி எதுவும் இல்லை
மௌனமாய் இரு


அரிதாகவே கேட்கிறோம்
அகத்தின் இசையை
எனினும்
ஆடிக்கொண்டுள்ளோம்
ஒவ்வொரு கணமும்
அதற்கான நடனம்


கடினப் பாறையில்
எதுதான் வளரும்?
நெகிழ்ந்த நிலமாய் இரு
உன்னில்
காட்டுப் பூக்கள்
விளையட்டும்


உன்
முடிச்சை அவிழ்க்கும்
ஞானத்தைத் தேடு

உன்
முழுமையைக் கோரும்
பாதையைத் தேடு


ஏய் நீ?
உன்னுள்ளான
அந்த நீண்ட பயணத்தை
எப்போது தொடங்கப் போகிறாய்?


கடலில் ஒரு துளி
அல்ல நீ
முழுக்கடல் நீ

ஒரு துளியில்!

ஆன்மாவில் இருந்து
இயங்கும் போது
நதியொன்று நகர்வதை
உன்னுள் உணர்வாய்:
ஆனந்தம்!


மௌனம் ஒரு கடல்
பேச்சு என்பது நதி

கடல் உன்னைத் தேடும்போது
மொழியின் நதிக்குள்
நுழையாதே!

கடலின் பேச்சுக்குக்
காது கொடு
வெட்டிப் பேச்சு
வேண்டாம் நண்பா!

உண்மையின் பிரசன்னத்தில்
மரபான சொற்கள்
உளறல் மட்டுமே

உளறலோ
பார்வைக்கான
பகரம் மட்டுமே

No comments:

Post a Comment