Thursday, September 26, 2013

ரூமியின் வைரங்கள் - part 2


பாலையில்
கப்பல் கட்டிய
நூஹ் நபியைப் போல்
அபத்தமாய்த் தெரிகின்ற
மாபெரும் திட்டமொன்றைத்

துவக்கு.


உன் சொற்களை உயர்த்து
உன் குரலை அல்ல
மலர்களை வளர்ப்பது
மழைதான்
மின்னல் அல்ல.


ஆயிரம் ஆசைகள்
வைத்திருந்தேன்
உன்னை அறியும் ஒற்றை ஆசையில்
உருகி மறைந்தன எல்லாம்


கோவில்களில்
தேவாலயங்களில்
பள்ளிவாசல்களில்
தேடிப் பார்த்தேன்
இறுதியில்
இறைவனைக் கண்டுகொண்டேன்
இதயத்தின் உள்ளே


உன் முன்
ஒவ்வொரு பாதையும்
அடைப்பட்டுப் போனாலும்
அந்த ரகசிய நண்பன்
உனக்குக் காண்பிப்பான்
எந்தக் கண்களும் பார்த்திராத
ரகசியப் பாதை ஒன்றை.


ஓர் நாள்
நீ என் இதயத்தை
முழுமையாய் ஆட்கொண்டு
யாழியினும் வலிதாக்குவாய்
உன் கண்ணிமைகளால்
என் இதயத்தில்
கவிதை ஒன்று எழுதுவாய்...
எந்தக் கவிஞனின் பேனாவும்
எழுத முடியாத கவிதை.



விளக்குகள் வேறு வேறு
ஒளி ஒன்றே


உன் உள்ளத்தில்
ஒளி இருந்தால்
வீடடையும்
வழி அறிவாய்


உலகச் சோலைக்கு
எல்லை இல்லை
உன் மனதைத் தவிர


காதலுக்கு இல்லை
அடித்தளம் எதுவும்
முடிவற்ற கடல் அது
துவக்கமும் இல்லை
முடிவும் இல்லை


காதலே
உனக்கும் அனைத்திற்கும்
இடையிலான பாலம்


தீயைப் பற்றிய உன் அறிவில்
தெளிவு எங்கிருந்து?

வார்த்தைகளே அதை உனக்கு
வழங்கிவிட்டது எனில்
தீயினைக் கொண்டே
சமைவதைத் தேடு!

இரவல் தெளிவில்
இருக்காதே

எரிந்திடாத வரை
எட்ட இயலாது
நிஜத் தெளிவை நீ

ஆசைதான் எனில்
அமர்க தீயில்

2 comments:

  1. என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தங்களின் ரூமி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டேன் பின் வரும் வாக்கியத்தோடு.. “நான் இறந்த பிறகு கப்ரில் என்னை தேடாதீர்கள், மனிதர்களின் இதயங்களில் என்னை தேடுங்கள் என்றார்கள் ரூமி (றஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள், சகோதரர் ரமீஸ் பிலாலியின் இதயத்தில் இருந்து....”

    ReplyDelete